திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் நீணாக்கேணி பிரதேசத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாகப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வசித்து வந்த குடியிருப்புக் காணியைக் கைப்பற்றுவதற்கு முயன்றமையால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.
பௌத்த மதகுருவும், பௌத்த இளைஞர் குழுவும், இயந்திரங்களின் உதவியோடு, நேற்று (15) காலை அக்காணிக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
இதனால், பதற்ற நிலைமை தோற்றியது. காணியின் பாதுகாப்புக்காக, போடப்பட்டிருந்த வேலிகள் இயந்திரங்களால் உடைத்தெறியப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து அங்கு மக்களும் ஒன்று திரண்டுவிட்டனர். இதனால், இவ்விரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், இந்த விவகாரத்துக்கு, நீதிமன்றத்தை நாடி, தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு சமரசம் செய்தனர். இதனையடுத்தே பதற்ற நிலைமை தணிந்தது. தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த காணியின் உரிமையாளர்கள் 1959 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உரிமை ஆவணத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.