வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக மாகாணசபை உறுப்பினர்கள் சிலரிடம் சுயவிபர கோவையை வழங்குமாறு கேட்டு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார். புதிய அமைச்சர்களை தெரிவு செய்வதற்காக முதலமைச்சர் நேற்று மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் தங்களது சுயவிபர கோவைகளை இன்று மதியத்திற்குள் சமர்ப்பிக்கும்படி முதலமைச்சர் கேட்டிருப்பதாக கூறப்படுகின்றது. சுயவிபரகோவை பெறும் இந்த நடவடிக்கையானது புதிய அமைச்சர்கள் தெரிவுக்கானது என கூறப்படுகின்றது. இந்த நிலையில், புதிய அமைச்சர்களை தெரிவு செய்யும்போது போதிய கால அவகாசம் எடுத்து சரியான தெரிவுகளை செய்யவேண்டும் என்று வடக்கு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக சகல தரப்பினருடனும் பேசப்படவேண்டும். குறிப்பாக மத தலைவர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் கூட்டமைப்பின் கட்சிகள் அனைத்துடனும் பேசப்படவேண்டும் என்பதை நாங்கள் முதலமைச்சருக்கு கூறியிருக்கின்றோம். மேலும் புதிய அமைச்சர்கள் தெரிவில் அவசரம் காட்டப்படாமல் முதலமைச்சர் தனக்கு தேவையான அளவு நாட்களை எடுத்து சரியானவர்களை தெரிவு செய்யவேண்டும் என்பதையும் கூறியிருக்கின்றோம். அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் 4 கட்சிகள் அங்கத்துவம் பெற்றிருக்கும் நிலையில், புதிய அமைச்சர்கள் தெரிவில் சகல கட்சிகளினதும் கருத்துக்கள் பெறப்படவேண்டும் என்பதையும் முதலமைச்சருக்கு கூறியிருக்கின்றோம். இதேவேளை, முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன் மீதான குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக மீள் பரிசீலணை செய்யப்பட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த விடயம் கட்டாயம் ஆராயப்பட வேண்டும். அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையா? பொய்யா? என உறுதிப்படுத்துவதன் ஊடாக அவர்களுடைய அரசியல் எதிர்காலத்திற்கு நிச்சயம் உதவ முடியும். மேலும், இந்த விடயம் தொடர்பாக மீள் பரிசீலணை செய்வதற்கு விசேடசபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் நாங்கள் முதலமைச்சரை கேட்டிருப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். |
புதிய அமைச்சர்களை தெரிவு செய்யும் முயற்சியில் முதல்வர் - அவசரப்பட வேண்டாம் என கோரிக்கை!
Related Post:
Add Comments