நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயற்பாடுகள் அமையவேண்டாம் – சபையில் முதல்வர்!


வடக்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பங்கம்
ஏற்படும் வகையில் வட. மாகாண சபையின் செயற்பாடுகளும், உறுப்பினர்களின் நடவடிக்கைகளும் அமையக் கூடாது எனவும் பல்வேறு அா்ப்பணிப்புக்களினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு களங்கம் ஏற்படும் வகையில் யாரும் செயற்பட வேண்டாம் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட. மாகாணசபை அமைச்சர்கள் மீதான ஊழல், நிர்வாக முறைக்கேடு குறித்த விசாரணை அறிக்கையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வட. மாகாண சபையின் விசேட அமர்வில் சிறப்புரை ஆற்றியதைத் தொடர்ந்து முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், அறிக்கையின் பிரதியினை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கையளித்தார்.

அறிக்கையின் பிரதியினைக் கையளிப்பதற்கு முன்னர் ஆற்றிய உரையில் சி.வி.விக்னேஸ்வரன் பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண சபையின் கௌரவத்தினைப் பாதுகாக்கும் பொறுப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் இருப்பதாகவும், எந்தவொரு விவாதமும் தனிப்பட்ட ரீதியாக எவரையும் தாக்குவதாகவும் இருக்க கூடாது என்றும் கூறினார்.

அத்துடன், ஒருவிடயம் நடந்ததா இல்லையா என்பதை அறிவதே இந்த விசாரணை அறிக்கையின் நோக்கும் என்றும், தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக்குவதையும் மனதைப் புண்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சபை உறுப்பினர்களின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அறிக்கையின் பிரதியை சபைக்கு சமர்ப்பிப்பதாகவும், அந்தரங்கமான அறிக்கையினை ஊரைக் கூட்டி ஊடகங்களிடம் கையளித்தால் அது வட. மாகாண சபைக்கு இழுக்கினை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
குறித்த அறிக்கையில் பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் அறிக்கையினைப் பெற்றவுடன், தங்களது விளக்கங்களை எழுத்து மூலம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


இவ்வாறு கொடுக்கப்படும் விளக்கங்கள் மற்றும் விசாரணை அறிக்கையின் பிரதிகள் என்பன சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு, அதன் மீதான விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் என்றும் அவைத் தலைவரிடம் கோரினார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila