குற்றம் புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்காலத்திலும் பலவந்தமாகக் காணாமல் போகச் செய்தல் இடம்பெறாது நிறுத்தப்படுவதையும் உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச ரீதியிலான காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளைய தினம் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பலவந்தமாகக் காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்களது சர்வதேச தினம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அனுட்டிக்கப்படுகின்றது.
மனக் கவலைகளோடும் துயரத்தோடும் பலவந்தமாக காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்களது மற்றுமொரு சர்வதேச தினத்தை நாம் எதிர்கொள்கின்றோம்.
பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு எதிராக காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக் கணக்கானோர் இந்த நாட்டில் உள்ளனர்.
கடந்த பல வருடங்களாக காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைதி வழியில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
அவர்கள் கோருவதெல்லாம், தங்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதன் உண்மைகளைக் கண்டறிய வேண்டுமென்பதே.
ஆயுதக் கலவரங்கள் முடிவுக்கு வந்து ஆண்டுகள் எட்டு கடந்து விட்டபோதும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுடைய பிரச்சினைகள் இதுவரை திருப்திகரமான வகையில் கவனம் செலுத்தப்படாத நிலையே இருந்து வருகின்றது.
உலகின் பல்வேறு பாகங்களிலும் இது மிக மோசமான பிரச்சினையாக உருவாகி வருவதாக அங்கத்துவ நாடுகள் உணர்ந்து கொண்டதையடுத்து 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தனது தீர்மானம் ஒன்றினூடாக இப்பிரச்சினைகள் தொடர்பாக தனது கவனத்தைச் செலுத்தியிருந்தது.
ஸ்ரீலங்காவில் பாதிக்கப்பட்டவர்களும் பல வருடங்களாகத் தமது அன்பானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிய முடியாதவர்களாகவும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவும் தொடர்ந்தும் இருந்து வரும் நிலைமை கவலை தருவதாக உள்ளமை கவனிக்கத்தக்கது.
இந்த விடயம் தொடர்பாக தனது உயர்ந்தபட்ச கவனத்தைச் செலுத்துமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
படையினரிடம் தங்களால் கையளிக்கப்பட்டவர்களுக்கு அல்லது கடத்தப்பட்டவர்களுக்கு அல்லது காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரியவர வேண்டும். அது அவர்களது உரிமை.
இந்த அடிப்படை உரிமையைக் கவனத்திற் கொள்ளாமல் விடமுடியாது. மேலும், குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதோடு,
இந்த நாட்டில் எதிர்காலத்திலும் இத்தகைய பலவந்தமாகக் காணாமல் போகச் செய்தல் இடம்பெறாது நிறுத்தப்படுவதையும் உறுதி செய்யுமாறும் கோருகின்றோம்.
இந்த நாட்டில், பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு மாறாகக் காணாமல் போகச் செய்யப்பட்ட செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும், சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் செயற்படுத்தப்படுவதனையும் உறுதிசெய்யுமாறும் நாம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.