கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மனநல மருத்துவ பிரிவுக்கான கட்டிடத் தொகுதி மற்றும் வைத்தியர்களுக்கான விடுதி என்பன வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இதை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
மனநலப் பிரச்சினை உள்ளவர்களின் தனிமையே அவர்களை பாதிப்புக்குள்ளாக்குகின்றது.
பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவ பீட மாணவர்கள் எனப் பலர் அண்மைக் காலங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அதிர்ச்சி, பயம் மற்றும் குற்ற உணர்ச்சி போன்ற பல காரணங்கள் இவற்றுக்கு காரணமாகின்றன.
அண்மையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதில் “தனது மைத்துனர் தன்னை சுடு பார்ப்போம் என்றார், சுட்டுவிட்டேன்.” என வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதுவும் ஏதோ ஒரு வகையான தாக்கத்தின் வெளிப்பாடு என எண்ண வேண்டியுள்ளது.
ஆனால். இதை அவருக்கு யாரோ சொல்லிக் கொடுத்து கூறிய கூற்றாகவும் இருந்திருக்கலாம். அவ்வாறு கூறினால் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி வழக்கை திசை திருப்ப முடியும் என்றும் எண்ணியிருக்கலாம்.
எது எவ்வாறு இருப்பினும் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொது மக்களின் பங்களிப்பு, சமூக ஆர்வலர்கள், அரசியல் பின்புலம் போன்றவற்றின் உரிய செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.