மக்களிற்கு எதனையும் செய்யாது அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கூட்டமைப்பினில் இணைந்து எதனை செய்வதென கேள்வி எழுப்பியுள்ளார் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக அமைப்பாளர் ஜயாத்துரை சிறீரங்கேஸ்வரன்.
யாழ்.ஊடக அமையத்தினில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பினில் கருத்து தெரிவித்த அவர் அண்மையினில் கூட்டமைப்பினில் விரும்பிய கட்சிகள் இணையலாமென அதன் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.அதனை தங்கள் கட்சி பரிசீலிக்கமாவென ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த ஜயாத்துரை சிறீரங்கேஸ்வரன் அரசை பாதுகாப்பது தான் தற்போது கூட்டமைப்பின் நோக்கமாகவுள்ளது.நாங்கள் முன்னைய அரசுடன் பங்காளிகளாக நல்லிணக்க அரசியலை செய்தோம்.இதன் மூலம் 12ஆயிரம் முன்னாள் போராளிகளை பொதுமன்னிப்பளித்து விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தோம்.ஆனால் தற்போதைய அரசுடன் இணைக்க அரசியல் செய்யும் கூட்டமைப்பு இரண்டு அரசியல் கைதிகளது வழக்குகளை அனுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்கு மாற்ற வலுவற்று திண்டாடுகின்றது.
இம்முறை உள்ளுராட்சி சபை தேர்தலை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி தனித்து எதிர்கொள்ளவுள்ளது.எக்கட்சியுடனும் கூட்டு வைப்பதில்லையென தீர்மானித்துள்ளது.
இதனிடையே முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவுடன் ஈபிடிபியின் ஒரு பிரிவினர் பிளவுபட்டு சென்றுள்ளார்களேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் ஈபிடிபியினில் எந்தப்பிளவும் இல்லையென தெரிவித்தார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்,வெளியேறியவர்கள் சிலர் அங்கு சென்றுள்ளனர்.அது அவர்களிற்குள்ள ஜனநாயக உரிமையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை அங்கு கருத்துரைத்த மற்றொரு முக்கியஸ்தரான சிவகரு பாலகிருஸ்ணன் ஜெனீவா சென்று சுமந்திரன் இலங்கை அரசை காப்பற்ற இங்கு நடந்தது போர்க்குற்றமல்லவென்கிறார்.அதுவும் தான் சட்டத்தரணியென்ற வகையினில் சொல்வதாக கூறுகின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ் மக்கள் வாக்களித்துவிட விஜபி கடவுசீட்டினில் சென்று அதனை சட்டத்தரணியாக சொல்வதாக தெரிவிக்கும் சுமந்திரனிற்கு வாக்களித்த தமிழ் மக்கள் குறித்து கவலையேற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.