புங்குடுதீவு மாணவி படுகொலை – லலித் ஜெயசிங்கவுக்கு கீழ் பணியாற்றிய பெரேராவால் வழங்கப்படும் சாட்சியைப் பதிவு செய்ய உத்தரவு


புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை காவல்தடுப்பிலிருந்து விடுவிக்க உதவிய குற்றச்சாட்டு வழக்கின் முதலாவது சந்தேகநபரான வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிக் காவல்துறைமா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு கீழ் பணியாற்றிய யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப்  காவல்துறைமா   அதிபர் என்.எல்.பெரேராவால் வழங்கப்படும் சாட்சியைப் பதிவு செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் இன்று கட்டளையிட்டார்.
லலித் ஜெயசிங்கவின் சார்பில் முன்னிலையாக சட்டத்தரணிகளின் கடும் ஆட்சேபனைகளுக்கு சரியான விளக்கத்தை வழங்கிய பின்னரே நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் இந்த உத்தரவை வழங்கினார்.
வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை காவல்துறை தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் மூத்த பிரதிக் காவல்துறைமா   அதிபர் லலித் ஜெயசிங்க மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிரான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில்  நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கின் முதலாவது சந்தேகநபர் லலித் ஜெயசிங்க தனது சட்டத்தரணிகளுடன் மன்றில் முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபரான யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய உப  காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் தெரிவித்தனர்.
சிறிகஜன் மீது இன்று மீளவும் பிடியாணை பிறப்பித்த நீதிவான், சந்தேகநபரின் முழுவிவரத்தையும் மன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
அந்த விவரங்களின் அடிப்படையில் மன்றின் கட்டளைக்கமைய  சிறிகஜன் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கவேண்டாம் என குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்துக்கு நீதிமன்றப் பதிவாளர் அறிவிக்கவேண்டும் எனவும் நீதிவான் அறிவுறுத்தினார்.
இந்த வழக்குத் தொடர்பில் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்டோரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மன்றில் முன்வைக்கப்பட்டது.
முதலாவது சந்தேகநபரான வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிக் காவல்துறைமா அதிபர்   லலித் ஜெயசிங்கவுக்கு கீழ் பணியாற்றிய யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பிரதிக் காவல்துறைமா அதிபர் என்.எல்.பெரேரா,  இந்த வழக்கின் சந்தேகநபர்களுக்கும் எதிராகச் சாட்சியமளிக்கத் தானாக முன்வந்துள்ளார் என நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் அவர் நேற்று மன்றுக்கு வருகை தந்திருந்தார். அவரின் சாட்சியம் பதிவதற்கு வசதியாக சாவகச்சேரி நீதிவான் மன்றத்தின் உரைபெயர்ப்பாளர், ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும்  சாட்சியமளிப்பதாக முன்வரும் சாட்சியை நீதிவான் நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. அவர் தானாகவே சாட்சியமளிக்க முன்வந்தார் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? என சந்தேகநபர் லலித் ஜெயசிங்கவின் சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தார்.
‘சாட்சியமளிக்க ஒருவர் முன்வந்தால் அவரது சாட்சியத்தை பதிவு செய்யவேண்டியது நீதிமன்றின் பொறுப்பு. அவ்வாறாகவே இந்த சாட்சியாளரையும் நீதிமன்றம் அனுமதியளிக்கிறது’ என்று நீதிவான் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரெவரி 28ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila