ஜெனீவாவிலிருந்து ரணில் தரப்பை காப்பாற்றும் நாடகங்களை அரங்கேற்றிவரும் நிமல்கா பெர்னாண்டோ காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்களுள் ஒருவராக பதவியேற்கின்றார்.அவ்வலுவலகத்திற்கு நியமிப்பதற்கு ஏழு பேரின் பெயர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அரசியலமைப்பு சபை முன்மொழிந்துள்ளது.
காணாமல் போனோர் பணியகத்தின் ஏழு ஆணையாளர்களைத் தெரிவு செய்வதற்காக, அரசியலமைப்பு சபை விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இதற்கமைய, 100 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன.
இந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரைக் கொண்ட அரசியலமைப்பு சபை, ஆணையாளர்களாக நியமிக்கத் தகுதிவாய்ந்த 7 பேரின் பெயர்களை தெரிவு செய்து, சிறிலங்கா அதிபருக்கு அனுப்பியுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இவர்களின் நியமனங்களை அங்கீகரித்த பின்னர், காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
இதனிடையே, காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஏழு பேரில் மனித உரிமை செயற்பட்டாளர் நிமல்கா பெர்னான்டோரும் ஒருவராவார்.
எனினும், இவரை இந்தப் பதவிக்குத் தெரிவு செய்வதற்கு, அரசியலமைப்பு சபையில் இடம்பெற்றுள்ள ஜேவிபி உறுப்பினர், விஜித ஹேரத் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஜநாவினில் தரித்து நின்று இலங்கைக்கான கால அவகாசத்தை பெற்றுவழங்குவதில் மும்முரமாக நிமல்கா தனது தரப்புக்களுடன் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.