முல்லைதீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்கு பிரதேச சபைகளில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள இளைஞர்களது கைகள் வலுத்துவருகின்ற நிலையில் அத்தேர்தல்களை தடுக்க தமிழரசு உச்ச கட்ட முயற்சிகளை மேற்கொள்ளமுற்பட்டுள்ளது.தேர்தலை இடைநிறுத்துவது வரை அம்முயற்சிகள் தொடர்கின்றன.
இதனிடையே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இறுதிவரை இருந்த மண் என்பதனால் புளொட்டிற்கு புதுக்குடியிருப்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் சிரமம் இருந்திருக்கலாம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் புதிய விளக்கமளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கட்சி அலுவலகத்தில் பெயர்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் என்னிடம் வேட்புமனு ஒப்படைக்க்பபட்டிருந்தது. இதன் போது எனது பணியாக காணப்பட்டது வேட்பாளர்களிடம் ஒப்பம் பெறுவது அதனை உரியவர்களிடம் முகவர் ஊடாக தேர்தல் திணைக்களத்தில் ஒப்படைப்பது மாத்திரமேயாகும்.
அந்த வகையில் சகல வேட்பாளர்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டு குறிப்பிட்ட நாள் அனைத்து வேட்பளார்களிடமும் ஒப்பம் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் 23 பேர் ஒப்பமிட வரவேண்டியவர்களாக இருந்தும் 21 பேர் சமூகமளித்திருந்தனர். அதில் புளொட் சார்பாக போட்டியிட வேண்டிய வேட்பாளர் அவ்விடயததிற்காக அங்கு வரவில்லை. அதன் பின்னர் நாம் நேரடியாக புளொட்டின் பிரதேச பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு அந்த பெண்ணை அனுப்புமாறு கோரியிருந்தேன். அதற்கு அவர்களும் அனுப்புவதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் ஊடக அறிவிப்பில் எனது அலுவலகத்தில் மிரட்டல் செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் அது பொய்யான ஊடகத்தகவல். அலுவலகத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் வைத்தே அந்த பெண்ணுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு ஏதோ ஒரு சம்பவம் நடந்துகொண்டிருந்தது.
ஆகவே அந்த பிரதேச புளொட் தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்கவே சம்பந்தப்பட்ட இடத்திற்கு நான் சென்றிருந்தேன். அதன்போது ஒப்பமிடுமாறு குறித்தபெண்ணிடம் நான் நேரடியாகவே கூறியிருந்தேன். நீங்கள் ஒப்பமிட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் நீங்கள் ஒப்பமிட்டு செல்லலாம் என கூறியிருந்தேன். அப்போது அந்த பெண் தெரிவித்திருந்தார் புளொட்டின் வற்புறுத்தலாலேயே நான் இங்கு வரவேண்டியிருந்தது. எனக்கு இதில் ஒப்பமிட சம்மதமில்லை. என்னை வற்புறுத்தவேண்டாம். அதை செல்லிவிட்டு செல்லவே நான் வந்தேன் ஒப்பமிட வரவில்லை என கூறியிருந்தார். அதன் பின்னர் தான் வேட்பாளராக இல்லாமல் போனதற்கு நானே காரணம் என சொல்லப்படுகின்றது. உண்மையில் அந்த பெண் அங்கு வராமையும் ஒப்பமிடாமையுமே காரணமாகும். இதற்கு அனைத்து வேட்பாளர்களும் சாட்சியாகவுள்ளனர். இவ்விடயம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்ற விடயம். ஆனால் அப்பெண் தனது கிராமத்திற்கு சென்றதன் பின்னர் நடந்ததாக சில விடயங்கள் கூறப்படுகின்றது. அதைப்பற்றி நான் எதையும் கூற விரும்பவில்லை. அதற்கும் எமக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே இது பொய் வாக்குமூலத்தினை ஊடகங்கள் ஊதி பெருப்பித்து புதுக்கடியிருப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றியை தட்டிவிடுவதற்காக செய்யப்பட்ட காரியமாகவே இதனை பார்க்கின்றேன்.
இது மாத்திரமின்றி புதுக்குடியிருப்பு மண் விடுதலைப்புலிகள் இறுதிவரை தங்கள் கைப்பிடியில் வைத்திருந்த மண். இந்நதிய இராணுவத்தை தவிர எந்த இராணுவமும் விடுதலைப்புலிகள் இல்லாமல் போகும் வரை சென்றதில்லை. எனவே புளொட் அமைப்புக்கு அங்கு வேட்பாளாகளை தெரிவு செய்வதில் சிரமங்கள் இருந்திருக்கலாம். அதற்காக அவர்கள் வற்புறுத்தியதாக நான் கூறவில்லை.
இத்துடன் உண்மைகளை அறிந்துகொண்டு ஊடக அறிவிப்புகளை செய்திருந்தால் இவ்வாறான பிரச்சனை வந்திருக்காது. அல்லது பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலத்தை பெண்ணிடம் எடுத்தவர்கள் அதேநாளில் என்னிடமும் எடுத்திருந்தால் அதனை ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தால் இப்பிரச்சனை அன்றே நின்றிருக்கும். ஆனால் இன்று ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு என்மீது சேறுபூச நினைக்கின்றனர். இது அனைத்தும் அப்பட்டமான பொய்யான அறிக்கை என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் பொலிஸ் விசேட குழுவொன்று அனுப்பப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
இதனிடையே தேர்தல் ஆணைக்குழுபுதுக்குடியிருப்பு பிரதேசசபை தேர்தல் விவகாரத்தில் புளொட் அமைப்பு பலிக்கடாவாக்கப்பட்டுள்ளதாக அதன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சவாலளிக்கும் விதமாக பிரதேசமக்களால் வண்டி சின்னத்தில் சுயேச்சைகுழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசசபையை இந்த சுயேச்சைகுழு கைப்பற்றலாமென கருதப்படும் நிலையில், வேட்பாளர் கடத்தல் விவகாரம் தேர்தல் ஆணையகத்தினால் கையிலெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என கோரியதையடுத்து இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையகம் கையிலெடுத்துள்ளது.
புதுக்குடியிருப்பு தேர்தல்களம் சிக்கலாக இருக்கலாமென ஊகித்ததையடுத்தே, வேட்பாளர் கடத்தல் விவகாரத்தை தமிழரசுக்கட்சி கையிலெடுத்திருக்கலாமென கருதப்படுகிறது. புளொட் அமைப்பை முறைப்பாடு செய்யுமாறு கூறி, அதை வைத்து தேர்தலை பின்தள்ளி வைத்தால், புளொட் மீதே அந்த விமர்சனங்கள் சேரும். இடைப்பட்ட காலத்தில் சுயேச்சை வேட்பாளர்களை அணிமாற்றலாமென தமிழரசுக்கட்சி முற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.