மன்னார் மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ் பெற்ற திருக்கேதீச்சரம் கோவிலுக்கு மிக அண்மையாக கோவிலில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதோட்ட ரஜமகா விகாரை என்ற பௌத்த விகாரைக்கு ஏ-32 வீதியில் படையினர் புதிய அறிவித்தல் தூபியொன்றை நிறுவியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீச்சரம் பகுதியின் புராதன வரலாற்றுப் பெயர் மாதோட்டம் என்பதாகும். துறைமுகப் பகுதியாகவும் விளங்கிய இதனை மாதோட்டம் என்றும் மாந்தை என்றும் வரலாற்றில் பதியப்பட்டது.
வரலாற்று புகழ்மிக்க தேவாரம் பாடப்பட்ட திருக்கேதீச்சரம் கோவில் சூழலில் படையினரது உதவியுடன் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமித்து இவ்விகாரை நிறுவப்பட்டுள்ளது.
இப்பகுதியில் விகாரை அமைக்கப்படுவது தொடர்பாகவும் ஏ-32 வீதியில் பெயர் நினைவு தூபி நிறுவப்படுவது தொடர்பாகவும் பல தடவைகள் புகைப்பட ஆதாரங்களுடன் சமூக செயற்பாட்டாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட போதும் மன்னாரை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அரசியல் தலைவரும் இது பற்றி வாயே திறந்திருக்கவில்லை.
அதுவும் இலங்கையின் நாடாளுமன்றில் பிரதிக்குழுக்களது தலைவராக செல்வம் அடைக்கலநாதனும் எதிர்கட்சி தலைவராக இரா.சம்பந்தனும் உள்ள நிலையில் அவர்கள் இது தொடர்பில் வாயn திறக்க மறுக்கின்றமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.