தமிழர்களின் வாக்குத் தமிழர்களுக்கே என்ற செய்தியை கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் மூலம் உணர்த்தியுள்ளனர்.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி கிழக்கு மாகாணத்தில் தமிழ்க் கட்சிகள் 339,923 வாக்குகள் பெற்று 247 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுக்கு 223,416 வாக்குகள் கிடைத்தன. 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது இத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுக்கு 116,507 வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன.
தேர்தல் முடிவுகளின் படி பல சபைகளில் ஆட்சி அமைப்பதற்குப் பெரும்பான்மை பெறவேண்டுமாயின் தமிழ்க் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்து பணியாற்றவேண்டும் என கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவர்கள் இணைய மறுக்கும் பட்சத்தில் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் சபைகளில் முஸ்லிம் கட்சிகள் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக தமிழர் தரப்பிலிருந்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.