வடக்கு கிழக்கை இணைப்பதும் சிரமமென இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில் கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இல்லை. வடக்கில் பெரும்பான்மையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே வட கிழக்கைப் பலவந்தமாக இணைக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளதாக அர்த்தப்படுத்த முடியுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வடக்கு முதலமைச்சர் கருத்து வெளியிடுகையில் ஒற்றையாட்சிக்குப் பாதகமில்லாத முறையில் தீர்வு இருக்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். எம்மவர் வேறு கதைகள் கூறுகின்றார்கள். “ஏகிய இராஜ்ய” என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அவர் பேசுகின்றார். அதற்கு வலிந்து பிற கருத்துக்களை எம்மவர் கொடுக்கின்றார்கள். “எக்சத்” என்பதே எமது தேர்வு என்று கூற எம்மவர் பயப்படுகின்றார்கள். தமிழர்கள் கிழக்கில் பெரும்பான்மையாக இல்லை என்பது பிரதமரின் கருத்து. தமிழ்ப் பேசும் மக்களே கிழக்கில் இப்பொழுதும் பெரும்பான்மையினர் என்பதே உண்மை. வடக்கில் தமிழர்கள் தான் பெரும்பான்மையோ என்பது தமக்குத் தெரியாதென்கின்றார். அவரின் கூற்றுப்படி சிங்கள இராணுவத்தினரும் முஸ்லீம்களுஞ் சேர்ந்து கிட்டத்தட்ட தமிழ் மக்களின் தொகையை எட்டிவிட்டார்கள் போல் கருத்துப்படுகிறது அல்லது விரைவில் தமிழர்களுக்கு மிஞ்சிய தொகையை பிறர் சேர்ந்து அடைவார்கள் என்றும் கருத்துப்படலாம்.
எமது இன முரண்பாட்டுத் தீர்வு கரவான எண்ணங்களுடனான மோசடிச் சிந்தனையுள்ளவர்கள் கையில் அகப்பட்டிருப்பதால்த்தான் எமக்கு விடிவு காலமே வராத ஒரு நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கின்றோம். நாம் கூறும் பாதை நியாயமானதும்இ நாட்டுக்கு நன்மையைச் செய்வதும்இ முற்று முழுதாக எமது இனப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரக் கூடியதுமானதொன்று. இதைத் தீவிரக் கொள்கை என்றால் வட கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் அல்லது அவர்களுள் பெரும்பான்மையினர் தீவிர வாதிகள் என்று ஆகிவிடுகின்றனர். ஏன் என்றால் அவர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு வாக்களித்தவர்கள். நான் நேர் வழியில் செல்வதை நாடகமாடுவதென்றால் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கெதிராகச் செல்பவர்கள் நாடகமே ஆடவில்லை என்று பொருளா? வட கிழக்கில் 1000 பௌத்த கோயில்களைக் கட்டுவது சம்பந்தமான பிரதமரின் கட்சிக் கருத்தைப் பற்றி எமது தலைவர்கள் எதுவுமே கூறவில்லை என்பதை கவனத்திற்கு எடுங்கள் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.