விசேடமாக தரம் 5 மாணவர்களை இலக்காக கொண்டு நடத்தப்படுகின்ற மேலதிக வகுப்புகளுக்கு பிள்ளைகளை இணைத்துக்கொள்வதற்காக சில ஆசிரியர்கள் அழுத்தம் கொடுப்பது தொடர்பில் சில பெற்றோர் தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் முறையிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
இந்த நிலமையை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கல்வியமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
சில ஆசிரியர்களால் நடத்தப்படுகின்ற மேலதிக வகுப்புக்களுக்கு சமூகமளிக்காத மாணவர்களுக்கு, பாடசாலையில் வைத்துக் அந்த ஆசிரியர்கள் பலவிதமான துன்புறுத்தல்கள் மேற்கொள்வது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுதவிர பாடசாலைக் காலத்தில் மாணவர்களுக்கு மேலதிக தனியார் வகுப்புக்களை நடத்துவதை நிறுத்துவதற்கும் தேவையான நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.