
கிளிநொச்சியில் வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் நிவாரண பனர்கள் கட்டிய ஒன்பது லொறிகளில், கொண்டு வரப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டமை தொடர்பாக பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வெள்ள நிவாரணப் பெனர்களுடன் ஒன்பது லொறிகளில், சுமார் ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கிளிநொச்சியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அரிசி,மா, சீனீ, பருப்பு, கடலை, சோயா, ரின்மீன், பிஸ்கட், தண்ணீர் போத்தல்கள், வெங்காயம் போன்ற பொருட்களை இறக்கியதாக பொருட்களை இறக்கி ஏற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். அத்தோடு இறக்கப்பட்ட பொருட்களில் அரிசி, மா, சீனி, பருப்பு, கடலை, சோயா ஆகிய பொருட்கள் பொதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தின் முகாமையாளரை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த பொருட்கள் தமது சதொச தலைமையகத்திலிருந்து நிவாரணத்திற்காக கொண்டு வரப்பட்டது என்றும் இதனை பொதி செய்து மக்களுக்கு வழங்குவதற்காக மாவட்டச் செயலகத்திடம் கையளிப்போம் எனவும் கூறினார்.
அத்தோடு ஏனைய ரின் மீன், பிஸ்கட்,தண்ணீர் போத்தல் போன்ற பொருட்களை மீண்டும் தலைமையத்திற்கு திருப்பி அனுப்பிவிடுவோம் என்றார்.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் ஊடகவியலாளர் சிலர் வினவிய போது தனக்கு அது தொடர்பில் தெரியாது எனவும், ஆனால் பருப்பு ஏனைய இடங்களை விட சதொசவில் விலை குறைவு என்பதனால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் பருப்பை மாத்திரம் சதொசவில் கொள்வனவு செய்து வழங்குமாறு கூறியிருக்கிறேன் என்றார்.
சதொச விற்பனை நிலையத்திற்கு வெள்ள நிவாரண பனர்களுடன் வந்த பொருட்கள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.