முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி வரை இரண்டு நாட்கள் யோஷித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று காலை கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ச இன்று மாலை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், யோஷிதவிடம் இருந்து வாக்குமூலம் பெற்ற பின்னர் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான காணி ஒன்றை வாங்கியமை தொடர்பாக யோஷிதவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யோஷித ராஜபக்ச கைது
UPDATE TIME - 10:12
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்த பகுதியில் வைத்து இன்று(25) அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.