இனப்படுகொலை நடைபெற்றதாக வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்க முடியாது இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதாக தெரிவித்து வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசு நிராகரித்துள்ளது.
அரசு என்ற வகையில் இனப்படுகொலை இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்டப் போரின் போது ஏராளமான தமிழர்கள் பாதுகாப்பு படையினரால் காப்பாற்றப்பட்டார்கள் என்பதை அனைவரும் அறிவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
போர் இடம்பெற்ற காலப் பகுதியில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை என கூற முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இனப்படுகொலை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கேஸ்வரனுக்கு நன்றாகவே தெரியும் என கூறியுள்ள அமைச்சரவை பேச்சாளர் கடந்த முறை இதே தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை ஏற்றுக்கொள்ளாத முதலமைச்சர் தற்போது எவ்வாறு அதனை ஏற்றார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் சில அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச நடைமுறைக்கு அமைய உள்நாட்டிலேயே இலங்கை அரசு விசாரணை நடத்தவுள்ளதாகவும் டொக்டர் ராஜித்த ஹேனாரத்ன கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பொது மக்களை போரின்போது மனிதக் கேடையங்களாகப் பயன்படுத்தியமையே இறுதிக் கட்ட போரின்போது ஏற்பட்ட பெருமளவு உயிரிழப்புக்கான காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
வடக்கு மாகாண சபையில் இன அழிப்பு தொடர்பிலான பிரேரணை நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தினால் 06 மாதங்களுக்கு முன்னர் இந்த பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.