அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னரே பொதுத்தேர்தலை நடத்தவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கமே சிறந்த தீர்வுக்கான வழியயனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை நேற்று சந்தித்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
பல்வேறு தரப்பினருடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் பூரண இணக்கப்பாட்டிற்கு அமைய, அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன் வைத்து, அந்த திருத்தத்தை மேற்கொண்ட தன் பின்னர் பொதுத்தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பிரதான அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை நிறுவுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறினார்.
சர்வதேச ரீதியில் நாட்டிற்குள் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் கருத்திற் கொள்ளும் போது, தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவிற்கு எவராலும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு மற்றும் தீர்மானங்களை எடுப்பதற்கும் எதிர்காலத்தில் யுத்தமொன்று ஏற்படாதிருப்பதற்கும் தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவே தீர்வாக அமையும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பவற்றில் தானே தலைவர் என்பதனால், கொள்கை மற்றும் அரசியல் விழுமியங்களை அடுத்த தேர்தலின் பொழுது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிர்வகிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.