தமிழ் மக்களுக்கு முழு அளவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தீர்வுத் திட்டம் வழங்குவதற்கு மேலும் காலம் தாழ்த்தப்பட்டால் பிரச்சினை வேறும் திசையை நோக்கி நகரக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஸைகள் தொடர்பிலும் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் பேசி தீர்வு ஒன்றை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முள்ளிவாய்க்கல் சம்பவம் காலத்தில் அழிக்க முடியாத வடுவினை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மற்றும் ஊடக அமைப்புக்கள் அனுமதிக்கப்படாது இந்த பேரவலம் அரங்கேற்றப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். சாட்சியமில்லாத ஓர் யுத்தம் என அவர் இறுதிக் கட்ட யுத்தத்தை விபரித்துள்ளார்.
இலங்கை யுத்தத்தின் போது தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உள்நாட்டு ரீதியான உதவிகள் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவு மருந்துப் பொருட்கள் போன்றனவும் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க, புலம்பெயர் தமிழ் சமூகம் முயற்சித்து வருகின்ற போதிலும், அந்த முயற்சி இதுவரையில் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.