அதில் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றும்போது நான் கடந்த 10 வருடங்களாகத் தமிழரசுக்கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு வலியுறுத்தியதாகவும் தற்சமயம் 10 வருடங்களின் பின்பு இணைந்து விட்டனர் எனவும் நான் சொல்வதைப் புரிந்துகொள்ள தமிழரசுக் கட்சிக்குப் பத்து வருடங்கள் தேவைப்பட்டது எனவும் கிண்டலடித்தார். அந்த மேடையில் அமரர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், திருச்செல்வம் ஆகியோரும் அமர்ந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படியான ஒரு வாய்ப்பு இப்போது டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவர் பதவிக்கு சுமந்திரன் பிரேரிக்க இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் வழிமொழிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த பல வருடங்களாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும்படி வலியுறுத்தியதாகவும் அவர்கள் எதிர்ப்பு அரசியலையே கைக்கொண்டு வந்ததாகவும் இப்போது அரசாங்கத்துடன் ஒரு இணக்க அரசியலை நடத்த முன்வந்ததை வரவேற்பதாகவும் தெரிவித்திருந்தார்.
சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டபோதும் வடமாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் தவராசா இப்படியான கருத்தை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றார்.
அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் காலம் கடந்தாவது தங்கள் பாதைக்கு வந்துவிட்டதாகக் கூறியே ஈ.பி.டி.பி. யினர் தங்கள் வரபேற்பைத் தெரிவித்துள்ளனர்.
அப்படியானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் துரோகப் பாதையில் காலடி வைத்துவிட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுவது தவிர்க்கமுடியாததாகும்.
ஈ.பி.டி.பியினர் தாம் ஆட்சியாளர்களுடன் ஒரு இணக்க அரசியலை நடத்தி இதன்மூலம் மக்களுக்குப் பல சேவைகளை ஆற்றி வந்ததாகக் கூறி வந்தனர். இருவேறு கருத்துள்ள இரு அமைப்புகள் ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வந்து அதன் அடிப்படையில் செயற்படுவதே இணக்க அரசியலாகும். ஆனால் ஈ.பி.டி.பியினர் ஆட்சியாளர்களின் கொள்கைகளைத் தமிழ் மக்கள் மேல் திணிக்கும் அரசியல் முகவர்களாகவும் அரசின் தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவர்களாகவுமே செயற்பட்டனர்.
அவர்கள் இணக்க அரசியல் என்ற பேரில் செய்தது அப்பட்டமான சரணாகதி அரசியல். அவர்கள் ஆட்சியாளர்களிடம் சரணடைவும் தமிழ் மக்கள் மீது சர்வாதிகாரமும் கொண்ட அரசியலையே கொண்டிருந்தனர். இப்போது அப்படியொரு அரசியலுக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வந்துவிட்டதாக அவர்கள் குதூகலிக்கின்றனர்.
அப்படியான ஒரு அரசியலுக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தமிழ் மக்கள் என்றுமே அனுமதிக்கப்போவதில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியமான நபர்களின் நடவடிக்கைகள் இவர்களும் இணக்கப்பாட்டு அரசியல் என்ற போர்வையில் சரணாகதிப் பக்கம் சாய்ந்துவிடுவார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புவது உண்மைதான். இந்தியாவின் அழுத்தங்கள் அமெரிக்க நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன சில குழப்பங்களை ஏற்படுத்தலாம். இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் அடிவருடிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தடம்புரள வைக்க முயற்சிக்கலாம்.
ஆனால் தமிழ் மக்கள் இவ்வித ஏமாற்றுகளுக்கு ஏற்கனவே ஈ.பி.டி.பி. போன்ற அமைப்புகளுக்குத் தகுந்த பாடம் கற்பித்து வந்துள்ளனர். அந்தக் கசப்பான அனுபவத்தைப் பெறத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் துணியமாட்டார்கள் என்றே தமிழ் மக்கள் நம்புகின்றனர்.