தீர்மானத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்குவது என்ற போர்வையில் சீனா, ரஸ்யா மற்றும் கியூபா போன்ற நாடுகள் இலங்கைத் தீர்மானத்தை பலவீனமாக்க முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜெனீவா பிரதிநிதி ஜோன் பிஸர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானம் குறித்த உத்தேச நகல் ஆவணம் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையின் முக்கிய பரிந்துரைகளை நீக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.சர்வதேச நீதவான்களின் பங்களிப்புடனான கலப்பு நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகளை தீர்மானத்திலிருந்து நீக்குமாறு இலங்கை உறுப்பு நாடுகளிடம் கோரி வருகிறது. சில தசாப்தங்களாக நிறுவனமய ஆதிக்கத்தின் ஊடாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருகிறது. இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கிய அதிகாரிகள் தைரியமான அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டும். இலங்கை போன்ற அதீதமான அரசியல் தலையீடு காணப்படும் நாடுகளில் சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமையே பொருத்தமுடையதாக அமையும். சர்வதேச நீதவான்களை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறைமை அவசியமானது. பாதிக்கப்பட்டவர்கள் மிக நீண்ட நாட்களாக நீதி நிலைநாட்டப்படும் வரையில் காத்திருப்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். |
அமெரிக்கத் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க முயற்சி! - மனித உரிமைகள் கண்காணிப்பகம்
Add Comments