365 நாட்களும் மாவீரர் நாள் போல் இருக்க முடியாதா? - ச. வி. கிருபாகரன்

2015ம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நடந்து முடிந்தது. புலம் பெயர் தேசங்களில் - என்ன ஒற்றுமை, என்ன சந்தோசம், என்ன ஆர்வம் என்ன சுறுசுறுப்பு, உலகமே விழாக் கோலம்!
தமிழீழத்தின் விடிவிற்காய், உலக தமிழர்களின் பெருமைக்காய், தமது உயிர்களை அர்பணித்த மாவீரர்களுக்காக, உலகில் ஒவ்வொரு தமிழர்களும், விசேடமாக ஈழத்தமிழர்களினால் மேற்கொள்ளப்படும் ஆக வணக்கம், மரியாதை, கௌரவம்.
மாவீரர் தினத்தின் கண்கொள்ளா காட்சிகளுடன், பெரும் மகிழ்ச்சியுடன் தேசிய எழுச்சி தினம் நிறைவாகியுள்ளது. ஆனால் இனவாத சிங்கள தேசத்திற்கும், அவர்களிற்கு வால் பிடிக்கும் தமிழர்களென தம்மை கூறிக்கொள்ளும் நவீன தமிழர்களிற்கு - வெறுப்பு, எரிச்சல், பொறாமை, கிண்டல்கள், திண்டல்கள், விதண்டாவாத வினாக்களென தமது உள்ளக் கொடுப்புக்களை ரோசமின்றி வெளிக்கொள்கிறார்கள்.
மாவீரர் தின செயற்பாடுகள் யாவும், இனவாத சிங்கள தலைவர்களிற்கு தேசிய அச்சுறுத்தலாம்! நவீன தமிழர்களிற்கு – மாவீரர் தின கொண்டாட்டங்கள் யாவும் வீண் செலவு, வீண் வேடிக்கை, வீண் வம்பாம்! இவற்றிற்கு எல்லாம் சுருக்கமாக பதில் கூறுவதனால், “கழுதைக்களுக்கு விளங்குமா கற்பூர வாசனையை”?
இன்று புலமபெயர் வாழ்வில் பிரிக்கப்பட்டு நிற்கும் ஈழத்தமிழர்கள், மாவீரர் தினம் போன்று, வாழ் நாள் முழுவதும், அதாவது 2009ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னைய நிலைபோன்று, ஏன் ஒற்றுமையாக செயற்பட முடியாதுள்ளது? கேள்வி சுருக்கமானது, பதில் மிகவும் கடினமானதும், நீளமானதும். கீழே அதற்கான பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
எனது இறுதி கட்டுரையான, “புலம்பெயர் நாடுகளில் ஒற்றுமை தானாக வரும்” என்பதில், புலம்பெயர் தேசத்தில் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் பல காரணிகளையும், நபர்களையும் தெளிவாக விபரித்திருந்தேன். ஒற்றுமையின் அடிப்படையில் இதைப் படித்து கவனத்தில் கொண்டவர்கள் ஆயிரம் ஆயிரம் - வாழ்த்துக்கள் குவிந்தன.
இதேவேளை கட்டுரையை படித்த சிலர், தமது உழைப்பிற்கு உலை வைக்கிறான் என எண்ணி, என்னை தீர்த்து கட்ட எண்ணியுள்ளார்கள் போலும்! அப்படியொன்று நடைபெறுமாயிருந்தால்> அத நிச்சயம் ஓர் புலனாய்வு பிரிவினரின் உதவியுடனேயே நடைபெறும்! ஒட்டுக்கேட்கிறார்கள், விலாசம் தேடுகிறார்கள், சுகம் விசாரிக்கிறார்கள் - எல்லாவற்றையும் உரிய இடங்களில் பதிவாக்க வேண்டியது எனது கடமை.
இங்கு தான், புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் விரும்பி கேட்கும் பாடல் நினைவிற்கு வருகிறது.
“அஞ்சம் என்பது மடமையடா, அஞ்சாமை தமிழர் (திராவிடர்) உடமையடா,
ஆறிலும் சாவு நூறிலும் சாவு, தாயகம் காப்பது கடமையடா”.
மிரட்டல்களிற்கு அடிபணியும் நபர்கள் உள்ளார்கள், ஆனால் நிச்சயம் யான் அல்ல.
மாவீரர் தினத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் யாவும், உலக தொலைக்காட்சிகள், வானொலிகள், இணையத்தளங்களென சகல ஊடகங்களிலும் நன்றாக வெளியாகியிருந்தனா.
சில சிந்தனைகள்
முதலாவதாக, மாவீரர் தினத்தன்று எப்படியாக ஈழத்தமிழர்கள் உலகம் பூராகவும் ஒற்றுமையாக தமது பங்களிப்புகை செய்தார்களோ, அப்படியாக தமிழீழம் என்ற லட்சியம் நிறைவேறும் வரை, தொடர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரள் கூறியது போன்று, லட்சியத்தை அடைவதற்கான பாதைகள் மாறலாம், ஆனால் லட்சியம் மாறாது தினமும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும்.
அடுத்து, தமிழ் நாட்டின் எமது உடன் பிறவா சகோதரர்களுடன் மட்டுமல்லாது, இந்தியாவின் மற்றைய மாநிலத்து மக்களது ஆதரவுடன் நாம் பயணிக்க வேண்டும். தமிழ் நாட்டு உறவுகளுடன் மட்டும் நாம் பயணிப்பதனால், சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவின் மற்றைய மாநிலங்களுடனான உறவை பேணுகிறார்கள். சிங்கள ஆட்சியாளர்களது மற்றைய மாநிலங்களுடனான உறவு, ஈழத் தமிழர் விவகாரத்தில், இந்தியா மத்திய அரசின் கொள்கை, சிந்தனைகளில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
மாவீரர் தினத்தில் மட்டுமல்லாது, புலம்பெயர் தேசத்து மற்றைய நிகழ்வுகளில், தமிழ் நாட்டிலிருந்து உரையாற்ற வரும் தமிழ் நாட்டின் சகோதரர்கள், தலைவர்கள் - எமக்கு எமது சரித்திரம் பற்றியோ, சர்வதேச நகர்வு பற்றியோ உரையாற்றுவதற்கு மேலாக, தமிழ் நாட்டில் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கான ஆதரவின் நிலை என்ன? இவற்றை மேலும் வலுவூட்டுவதற்கு ஈழத்தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும், மற்றைய மாநிலங்கள் உட்பட மத்திய அரசின் நிலைப்பாடுகள் எப்படியாக உள்ளது, இவற்றை வலுப்படுத்துவதற்கு ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் போன்ற விடயங்களை எடுத்துரைப்பதே வரவேற்கத்தக்கது.
புலம் பெயர் தேசங்களில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் அதேவேளை, நாட்டில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் பற்றியும் புலம்பெயர் தேசத்து அமைப்புக்கள் சிந்திக்க வேண்டும்.
2008ம் ஆண்டிற்கு முன்பு அவர்களது நிலை வேறாக இருந்தது. இது எனது கருத்து அல்ல! நாலு சுவருக்குள் அடைபட்டு எந்த சுதந்திரமும் அற்று வாழ்பவருடைய கருத்தே. ஆகையால் 2016ம் ஆண்டு முதல், நாட்டில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்களையும் சகோதரர்களையும் எப்படியாக கௌரவிக்கலாம் என்பது பற்றி உரியவர்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழகத்தை சார்ந்த மாவிரர்கள்!
தமிழ் நாட்டு தலைவர்களும், மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவில் நீக்குவதற்கு மிக நீண்டகாலமாக முயற்சித்து வருகிறார்கள்.
இவ்வேளையில், மிகவும் கவலை தரும் செய்தி என்னவெனில், பாரீசிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில், ‘தமிழ்நாட்டை சார்ந்த மாவீரர்களென’ கூறப்படும் சிலரின் - படங்கள், விலாசங்கள், அவர்களது வீரச்சாவு பற்றிய விபரங்களை விசமத்தனமாக கடந்த வாரம் பிரசுரித்துள்ளனர். பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இவ் அனுமதிiயை கொடுத்தது யார்?
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு இது ஆதாரம் கொடுக்கும் விடயம் என்பதே உண்மை. தேசிய பத்திரிகையென மார்பு தட்டும், ‘தேய்ந்த பத்திரிகையாளர்கள்’, தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவில், விசேடமாக தமிழ்நாட்டில் ஓரம் கட்டுவதற்கான திட்டமே இது என்பதை ஓர் பாலகனே அறிவான்.
இன்று வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்களிலோ, வேறு எந்த ஊடகங்களிலோ வெளிவராத இப் படங்களும் விபரங்களும், எதற்காக திடீரென தற்பொழுது இவ் ‘தேய்ந்த பத்திரிகையில்’ வெளியாகியுள்ளது என்பதை யாவரும் தட்டி கேட்க வேண்டும்.
இவர்கள் தாம் விரும்பும் பதிலை எழுதி தம்மை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்து நீடிப்பதற்கு இப் படங்களும், விபரங்களும், முக்கிய காரணியாகியுள்ளது ஆகையால், தேய்ந்த பத்திரிகையும் இதன் குழுவினரும் சரித்திரம் படைத்துள்ளனர் என்பதே உண்மை.
இவ் தேய்ந்த பத்திரிகை, தமிழ் நாட்டை சார்ந்த மாவீரர்களது பட்டியலை மட்டுமல்லாது, போராட்ட காலங்களில் தமிழீழ விடுதலை புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பல அந்தரங்க மின்அஞ்சல்களை ஆதாரம் காட்டி, முள்ளிவாய்க்காலின் பின்னர், அதாவது, 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், பல காரசாரமான கட்டுரைகளையும் வெளியிட்டிருந்ததுடன், 2013ம் ஆண்டு தாமே ஓர் மாவீரர் நாள் அறிக்கையையும் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யார் என்பது பற்றி இவர்களுக்கு நிதி உதவி வழங்குவோர் சிந்திக்க வேண்டும்.?
இவ் ஆதார பூர்வமான உண்மையை வெளிபடையாக எழுதியதற்காக – அனாமதேய மின் அஞ்சல், கடிதங்கள், கறுப்பும் வெள்ளையும் வரும் என்பதை அறிவேன். அவற்றிற்கு பதில் எழுதவும் தயாராகவுள்ளேன், ஆனால் முடிந்துவிடும் மின் அஞ்சல்களுக்கு அல்.
பிரித்து ஆளுகின்றனர்
ஒரு நாட்டின் பதுகாப்பிற்கு, வெற்றி தோல்விகளுக்கு அதனுடைய புலனாய்வு சேவை மிக முக்கியம் என்பதை உலகறியும். ஒரு புலனாய்வு சேவை தமது நேர்மையான சுத்தமான கடமைகளிலிருந்து தவறும் சந்தர்பங்களில், அவை பாரீய தோல்விகளிற்கு காரணமாகின்றன. புலனாய்வு வேலை என்பதில் பல பிரிவுகள், பல வகைகள், பல ராகங்கள் உண்டு என்பதை யாரும் அறிவர்.
தமிழீழ விடுதலை போராட்டத்திற்கான ஆயுத போராட்டம், பாரிய வெற்றிகளை ஈட்டியதுடன், உலகில் எந்த விடுதலை போராட்டத்திடம் இருந்திராத – தரை, கடல், ஆகாயம் படைகளுடன், பாரிய ஆயுதங்களையும், ஓர் திறமை வாய்ந்த காவல்துறையையும் உள்ளடங்கியிருந்தது என்பது உண்மை.
இதன் காரணமாக, உலக நாடுகள், விசேடமாக மேற்கு நாடுகளின் புலனாய்வு துறையினர், தமிழீழத்திலிருந்து மேற்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்களிடையே, தகவல் திரட்டுதலுடன், புலம் பெயர்வாழ் தமிழர்களின் ஒற்றுமையை குழப்பும் செயற்பாடுகளுக்கும் ஒத்தாசை வழங்குகின்றனர்.
இதற்காக நல்ல ஊதியத்துடன், சில ஈழத் தமிழர்கள் மிக நீண்ட காலமாக கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ளதுடன், ஈழத் தமிழர்களை பிரித்து வைப்பதற்கான திட்டங்களிற்கு தேவையான நிதியையும் வழங்குகின்றனர்.
உதாரணத்திற்கு, பிரிந்து செயற்படுபவர்களிற்கு காரியாலயம் தேவைபடும் வேளையில், காரியாலயத்திற்கான வாடகை பணத்தையும், குழப்பங்களை உண்டுபண்ணக் கூடிய விருந்துகள், விருந்தோம்பல்களிற்கான நிதியையும் வழங்குகின்றனர். மிக நீண்டகாலமாக ஈழத்தமிழர்களிடையே தகவல் சேர்ப்பில் ஈடுபடுபவர்கள், தமது திட்டத்திற்கு, விடயம் புரியாத சிலரையும் இணைத்து மிகவும் திறமையாக செயல்படுகின்றனர்.
அப்பாவிகள்
இவ் செயற் திட்டத்திற்கு, முள்ளிவாய்க்காலின் பின்னர் புலம்பெயர் தேசத்தில் அரசியல் தஞ்சம் கோரிய சில அப்பாவி தமிழர் பலிக்கடாவாகியுள்ளனர். பல மேற்கு நாடுகளில் தமிழ் அகதிகளிற்கு, மொழி ஓர் பாரிய பிரச்சினையாகவுள்ளது.
ஓர் ஈழத் தமிழர் தனது தாய் மொழியை கற்க ஆரம்பிக்கும் பொழுதே, ஆங்கிலத்தையும் கற்பதனால் - கனடா, அமெரிக்கா, அவுஸ்திரெலியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்களிற்கு, மொழி ஓர் சர்ச்சையான விடயம் அல்ல. ஆங்கிலத்தில் பாண்டித்தியம் இல்லாவிடிலும் சமாளித்துக் கொள்கிறார்கள்.
ஆனால் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளை கொண்ட மற்றைய மேற்கு நாடுகளில், அரசியல் தஞ்சம் கோரிய ஈழத் தமிழர், மற்றும் போராளிகள், தமது வாழ்வாதார தேவைகளான – மருத்துவம், நிர்வாகம், வதிவிட விடயங்களை கையாள்வதற்கு, அந்நாட்டில் மொழி ஆளுமை கொண்டவர்களை நாடவேண்டியுள்ளது.
இவ் சந்தர்ப்பத்தை, தகவல் சேகரிக்கும் நபர்கள் நன்றாக பாவித்து கொள்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்வதாக கூறி, தமது தேவைகளை நன்றாக பூர்த்தி செய்கிறார்கள். சுருக்கமாக கூறுவதனால் தமது வலைக்குள் சிக்குபவர்களை பாவித்து, தமது உழைப்பை செவ்வனவே நடத்துகிறார்கள். மொழி ஆளுமையற்ற தமிழ் அகதிகள், கிணற்று தவளைகள் போல், வாழ் நாள் முழுவதும், இவ் மோசடி நபர்களை நம்பி காலம் கழிக்க வேண்டியுள்ளது.
புலனாய்வு பிரிவினருக்கு சேவை செய்வோரை நாம் மிக இலகுவில் அடையாளம் காணமுடியும். இவர்களிற்கு தகவல்கள் மட்டுமே முக்கியமானது. யார்? எவர்? எங்கு? எப்படி? எத்தனை? போன்ற கேள்விகளை அடுக்கி கொண்டு போவதுடன், மற்றவர்களுடைய தொலைபேசி இலக்கங்களை அறிவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
இவர்களை எப்படி எட்ட வைத்தாலும், தகவல் சேகரிப்பிற்காக மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்வார்கள். அங்கு இங்குவென எங்கும் அலைவார்கள். அத்துடன் விருந்தோம்பலில் தாராள மனப்பான்மை கொண்டவர்களாக கணப்படுவார்கள்.
எனது அனுபவம்
2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தகவல் சேகரிக்கும் நபர் ஒருவர் என்னை பின் தொடர்ந்தார். அவரை எட்டவைத்தேன். இதனால் ஆத்திரம் கொண்டவர், சில வருடங்களின் பின்னர் ஓர் ஊடகத்தில் என் மீது வசைபாடினார். இதே நபர், ஓற்றுமையை குழப்புவதற்காக மக்களிடையே பல பொய்களை கூறி, குழறுபடிகளை செய்து வருகிறார்.
2011ம் ஆண்டு மாவிரர் தின வேளையில், ‘றோல்சும் வடையும் விற்று பணம் சேகரிக்காத மாவிரர் தினத்திற்கு மட்டுமே செல்லுங்களென’ பிரச்சாரம் செய்த இவ் நபர், கடந்த மாவிரர் தினத்தன்று சிற்றுண்டிச் சாலையில் றோல்சும் வடையும் வங்கி கொடுத்து, சிலரிடம் தகவல் சேகரிப்பு நடாத்தியதை பலர் கண்டுகொண்டார்கள்.
அதே நபர், மிக அண்மையில் ஓர் கூட்டத்திற்கு சென்று மண்டபத்தில் யார் யார் இருக்கிறார்களென கணக்கெடுத்ததும், சில நிமிடங்களில் வெளியேறிவிட்டார். சுருக்கமாக கூறுவதனால், தாழ்வு மனப்பான்மை கொண்ட இப் பெயர் வழிகள், மற்றவர்களை துன்பத்திலும் துயரத்திலும், கஸ்டத்திலும் சிக்கவைத்து வயிறு வளர்க்கிறார்கள்.
அதே ஆண்டு ஏப்ரல் மாதம், எம்மில் சிலர் ஒரு வழங்கறிஞரிடம் ஓர் வழக்கு சம்பந்தமாக சந்திப்பதற்கு செல்லும் வேளையில், இன்னுமொரு நபர், எமக்கு தொலைபேசி செய்து தானும் வழங்கறிஞரை எம்முடன் சந்திக்க வேண்டுமென விடாப்பிடியாக நின்றார்.
உமக்கு இவ் வழக்கிற்கும் என்ன சம்பந்தமென வினாவிய வேளையில், ‘உங்களிற்கு மொழி பிரச்சனை இருக்கும் அதற்கு நான் உதவி செய்ய விரும்புகிறேன்’ என்றார். இவர்கள் என்றும் பாவிக்கும் துரும்பு இது தான். இவை எல்லாம் சிரிப்பான விடயம் மட்டுமல்லாது, இவர்களிற்கு கிடைக்கும் நல்ல ஊதியம், இவர்களை இப்படியாக செயற்பட வைக்கிறது. இதற்கு பலியாவது அப்பாவி அகதிகள்! மிகவும் சுருக்கமாக கூறுவதனால், இவர்கள் ஒற்றுமையை ஒருபொழுதும் விரும்பாத நபர்கள்.
புலனாய்வு துறையினரின் ஓர் தத்துவம் என்னவெனில், தம்மால் எதிர்கொள்ள முடியாத நபர்களிற்கு, மறைமுகமான தொடர்ச்சியான ஏமாற்றங்களை உண்டுபண்ணுவதன் மூலம், அவர்களை அவர்களது கடமைகளிலிருந்து விலக வைக்க முடியும் என்பது. புலனாய்வு துறையினரின் செயற்பாடுகள் செயற்திட்டங்கள் பற்றி வாசித்து அறியாதவரிடம், இத் தத்துவம் சிலவேளைகளில் வெற்றி பெறலாம்.
நடிக்கிறார்கள்
போராளிகள் தமது உயிர்களை அர்ப்பணித்து, சகல விதமான பயிற்சிகளை பெற்றவர்கள். துயிலும் இல்லத்தில் மாவீரர்களிற்கு எப்படியாக அக வணக்கம் செய்யவேண்டும் என்பதையோ, பாதுகாப்பு, தற்பாதுகாப்பு பற்றியோ அவர்களுக்கு யாரும் புலம்பெயர் தேசத்தில் கற்று கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
துயிலும் இல்லத்தில் பாதணிகளுடன் மரியதை செலுத்துவதற்கான அனுமதி, மிக நீண்ட காலமாக நாட்டில் இருந்துள்ளதை அறியாத மோசடி பெயர்வழிகளும், புலம்பெயர் தேசங்களில், ‘அலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை போல்’ வாழ்ந்தவர்களும், பாதுகாப்பு, தற்பாதுகாப்பு பற்றிய பயிற்சியையோ, பட்டடையை கண்டிராதவர்கள், இவை பற்றி கதைப்பதற்கோ, கண்காணிப்பதற்கோ, எடுத்துரைப்பதற்கோ அருகதை அற்றவர்கள்.
இவர்கள் மக்கள் முன் தம்மை பெரிய மனிதர்களாக காண்பிப்பதன் மூலம், தூய்மையான மனிதர்களாக முடியாது. இந் நபர்கள் பற்றிய சரித்திரம் தெரியாதவர்களிடம் மட்டுமே, இவர்களது மார்பு தட்டுதல் சென்றடையும்.
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
04-12-2015
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila