மத்திய அரசாங்கம் ஒவ்வொரு விடயத்திலும் தனது பிடியை இறுக்க முற்படுகின்றது: முதலமைச்சர் குற்றச்சாட்டு

cv.w“மத்திய அரசாங்கத்திடமிருந்து “கிராம இராஜ்ஜியம்” என்கின்ற புதிய திட்டத்திற்கான வரைவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற கிராம மற்றும் மாவட்ட மட்டத்திலான குழுக்களே சகல அபிவிருத்திச் செயற்திட்டங்களையும் தீர்மானித்து செயற்படுத்துகின்ற அதிகாரத்தினை கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன. இது மாகாணசபைகளைப் புறந்தள்ளி மத்திய அரசு தனது நேரடிச் செல்வாக்கை பிரயோகிக்க முற்படுகின்ற ஓர் புதிய வடிவிலான திட்டமாகக் கருத வேண்டியுள்ளது. இவ்வாறு மத்திய அரசாங்கம் ஒவ்வொரு விடயத்திலும் தனது பிடியை இறுக்க முற்படுகின்றதே தவிர தளர்த்த முற்படவில்லை” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
முதலாவது வடக்கு மாகாண சபையின் 41வது அமர்வு இன்று அன்று காலை 9.30 மணிக்கு மாகாண பேரவைச் சபாமண்டபத்தில் ஆரம்பமானபோது, 2016ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் சம்பந்தமான அறிமுகவுரையை முதலமைச்சர் நிகழ்த்தினார். முதலமைச்சர் தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:
“கடந்த வருட நிதி ஒதுக்கீட்டின் போது எனது உரையில் வடமாகாணத்தின் அப்போதைய நிலை பற்றியும் பலவருடங்கள் கடந்தும் போரினால் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து எமது மக்கள் இன்னமும் முற்றுமுழுதாக விடுபடவில்லை என்ற கருத்தையுந் தெரிவித்திருந்தேன். தற்போதும் அந்த நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. போரினால் பலவிதங்களில் பாதிக்கப்பட்ட எமது மக்கள் வீடுகளை இழந்து, சொத்துக்களை இழந்து, குடும்பத் தலைவர்களை இழந்து, பிள்ளைகளை இழந்து, பெற்றோர்களை இழந்து, உடல் அங்கங்களைப் பறிகொடுத்து நிர்க்கதியாய் நிற்கின்றார்கள். மேலும் காணாமல்ப் போனேரின் குடும்பத்தினர், சந்தேகத்தின் பேரில் சிறையில் வாடுபவர்களின் குடும்பங்கள் என பலதரப்பட்ட மக்கள் தமது குறைகளை தினமும் எம்மிடம் தெரிவித்தவாறு உள்ளனர்.
அதே நேரம் வெளிநாட்டுத் தூதுவர்கள், தூதுவராலய அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் எனப் பல மட்டங்களில் உள்ளவர்கள் எம்மை அணுகி வடமாகாண சபையினதும் இங்கு வாழ்கின்ற மக்களினதும் நிலைமைகள் பற்றித் தினமும் ஆராய்ந்த வண்ணம் உள்ளனர். ஆனாலும் இதுவரை குறிப்பிடக் கூடியளவு முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றே குறிப்பிடவேண்டும்.
இப்பகுதியில் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற அல்லது மேற்கொள்ளப்பட இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பல எமது மக்களுக்கு நன்மை பயப்பதைவிட தென் பகுதி மக்களுக்கு நன்மை வழங்குந் திட்டங்களாகவே காணப்படுகின்றன. அத்துடன் புதிய அரசாங்கத்தினது செயற்பாடுகள் மேம்போக்காக நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதாகக் காணப்படுகின்ற போதிலும் மறைமுகமாக மாகாணசபைகள் மீதான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தும் பேணுகின்ற வகையில்த் தான் காணப்படுகின்றன. அத்துடன் மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும் மத்திய அரசாங்கத்தினது நேரடிக் கட்டுப்பாடுகளை அதிகரிக்கக் கூடிய வகையிலுமான மறைமுகத் திட்டங்களை அமுல்படுத்த முற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அண்மையில் மத்திய அரசாங்கத்திடமிருந்து “கிராம இராஜ்ஜியம்” என்கின்ற புதிய திட்டத்திற்கான வரைவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற கிராம மற்றும் மாவட்ட மட்டத்திலான குழுக்களே சகல அபிவிருத்திச் செயற்திட்டங்களையும் தீர்மானித்து செயற்படுத்துகின்ற அதிகாரத்தினை கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன. இது மாகாணசபைகளைப் புறந்தள்ளி மத்திய அரசு தனது நேரடிச் செல்வாக்கை பிரயோகிக்க முற்படுகின்ற ஓர் புதிய வடிவிலான திட்டமாகக் கருத வேண்டியுள்ளது. இவ்வாறு மத்திய அரசாங்கம் ஒவ்வொரு விடயத்திலும் தனது பிடியை இறுக்க முற்படுகின்றதே தவிர தளர்த்த முற்படவில்லை. அதிகாரப் பரவலாக்கத்திற்குப் பதில் அதிகார மையமாக்கலையே இன்றைய அரசாங்கம் கடைப்பிடிக்க எத்தனிப்பது போல்த் தெரிகின்றது.
கடந்த காலத்தில் எம் மீது திணிக்கப்பட்டிருந்த ஆளுனரின் கட்டுப்பாடுகள் பிரதம செயலாளரின் ஒத்துழையாமை போன்ற தடைகளில் இருந்து நாம் இப்போது விடுபட்டுள்ள போதிலும் எமது செயற்பாடுகளை செயற்திறனுடன் முழுமையாக நிறைவேற்றுவதற்கு முடியாமல் உள்ளது. பல வழிகளில் மத்தியன் செல்வாக்கை மேம்படுத்தவும் மாகாணத்தைப் புறக்கணிக்கவுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மையாக இருக்கின்றன. மேலும் அரச அலுவலர்களின் உளப்பாங்கில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு நாம் இன்னமும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. மாற்றங்களை நடைமுறைப்படுத்தவும் நாங்கள் இவ்வருடம் பின்நிற்கப் போவதில்லை என்பதை இங்கு கூறிவைக்கின்றேன்.
மத்திய அரசினது மன நிலைமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு எமது மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு வடமாகாண அரசிற்கு அனுசரணையாக எமது மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் வாழ்வாதார தேவைகளுக்குமான உதவிகளையும் புரிய அவர்கள் முன்வருவார்கள் எனவும் நம்புகின்றேன். எம்மிடையே உள்ள அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து எமது மக்களின் விடிவிற்காக 2016ல் அனைவரும் கைகோர்த்துப் பாடுபடுவோம் என இச்சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் விளித்து எனது ஆரம்ப உரையை நிறைவு செய்து 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க விழைகின்றேன்.
மாகாணசபையொன்று இல்லாதிருந்து நீண்ட காலத்தின் பின்னர் வடமாகாணத்தில் முதன்முதலாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் முதலமைச்சர் என்ற வகையில் இந்த வடமாகாண சபையின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை இச்சபையில் சமர்ப்பிப்பதில் மகிழ்வடைகின்றேன். வடமாகாணசபையின் ஆட்சிக் கட்டமைப்புக்குட்பட்ட எமது 5 மாவட்டங்களின் பொருட்டு ஆற்றப்படவுள்ள நடவடிக்கைகளுக்காக 2016ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள், அந்நிதியை நிதியீட்டம் செய்யும் வழிமுறைகள் தொடர்பாக இவ் விபரங்களை சமர்ப்பிக்க விழைகின்றேன்.
ரூபா 23,269.880 மில்லியன் 2016ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக எமது மாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மீண்டு வரும் செலவீனத்திற்காக ரூபா 18,574.230 மில்லியனும் மூலதனச் செலவீனத்திற்காக ரூபா 4,695.650 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ் வரவு செலவுத்திட்டமானது வடமாகாணத்தில் வசிக்கும் சுமார் பன்னிரண்டு இலட்சத்து முப்பத்தையாயிரத்து அறுபது (1,235,060) மக்களின் தேவைகளை வடமாகாணத்திற்கான முதலமைச்சு மற்றும் ஏனைய நான்கு அமைச்சுக்களின் ஊடாகவும் ஏனைய மாகாண அலகுகள், திணைக்களங்கள் ஊடாகவும் எம்மால் வழங்கக் கூடிய பயன்களை எமது மக்களுக்கு வழங்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
முதலில் பொதுவான சில விடயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியுள்ளது.
அரசியல் யாப்பின் 13ம் திருத்தச் சட்டம்
எமது வடமாகாணசபை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே வழிநடத்தப்பட்டு வருகின்றது. தொடக்கத்திலேயே நாம் பதவிக்கு வந்த போதே அச்சட்டத்தின் பலவிதமான குறைபாடுகளையுந் தேவைப்பாடுகளையும் குறிப்பிட்டிருந்தோம். எனவே அவற்றிற்கு அமைவாகவே எமது நிர்வாகம் ஆற்றுப் படுத்தப்பட்டு வருகின்றது என்பதை நாம் மறத்தலாகாது.
வருடாவருடம் மாகாணங்களுக்குரிய நிதியமானது நிதி ஆணைக்குழுவினால் மாகாணசபை செலவினங்களுக்காக தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டு மாகாணங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. இவ்வருடம் இவை ஒரு அமைச்சிடம் கையளிக்கப்பட்டு அதனூடாக எமக்குத் தரப்படவேண்டும் என்று சிபார்சு செய்யப்பட்டிருப்பினும் ஒன்பது மாகாணசபைகளினதும் முதலமைச்சர்களின் எதிர்ப்பின் நிமித்தம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆணையைத் தொடர்ந்து அந்த வழிமுறை கைவிடப்பட்டது. மாகாணங்களை மத்திக்கு அடிமைப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகவே இதனைக் காண்கின்றேன்.
பிராந்தியங்களுக்கான அபிவிருத்தியை சமஅளவில் அடைந்துகொள்ளும் நோக்குடன் பின்வரும் பிரமாணங்களின் அடிப்படையில் மாகாணங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
சனத்தொகை
தலாவீத வருமானம்
சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வினைக் குறைத்தல்
சகல மாகாணங்களின் தலாவருமானத்தை சம அளவில் பேணுதல் ஆகியன.
இப்பிரமாண அடிப்படை எமக்கு நன்மை பயக்கவில்லை என்பதை சற்று நேரத்தில் உங்களுக்கு விளக்குவேன். அதற்கிடையில் இதுவரையான ஒதுக்கீடுகளின் மற்றும் எம் கோரிக்கைகளின் விபரங்களை உங்கள் முன்வைக்க ஆசைப்படுகின்றேன். முதலில்
2015 ஆம் ஆண்டிற்கான அதாவது இந்த வருடத்தின் நிதி ஆணைக்குழுவின் ஒதுக்கீடு எவ்வாறு அமைந்தது என்று பார்ப்போம் –
மீண்டெழும் செலவு ரூபா 15,123 மில்லியன்
மூலதனச் செலவு
பிரமாண அடிப்படையிலான கொடை ரூபா 400 மில்லியன்
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன் கொடை ரூபா 1,440 மில்லியன்
2016 ஆம் ஆண்டிற்காக வட மாகாண சபையினால் நிதி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிதித் தேவையின்; விபரமும் அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீடுகளையும் அடுத்துப் பார்ப்போம் –
விபரம்
ஆணைக்குழுவிடம் கோரப்பட்ட தொகை
ஆணைக்குழுவால் அனுமதிக்கப்பட்ட தொகை
மீண்டெழும் செலவு
ரூபா 20,479 மில்லியன்
ரூபா 18,404.23 மில்லியன்
மூலதனச் செலவு
ரூபா 7,978.03 மில்லியன்
ரூபா 3,199 மில்லியன் (Pளுனுபு)
ரூபா 475 மில்லியன் (ஊடீபு)
ஆகவே 2016 ஆம் ஆண்டிற்காக நிதி ஆணைக்குழுவிடம் கோரப்பட்ட தொகையில் 40மூ மட்டுமே வடக்குமாகாணத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி வரையறுக்கப்பட்ட காரணத்தினால் மாகாணத்திற்குரிய இனம்காணப்பட்ட வருடாந்த தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இத்தருணத்தில் நிதி ஆணைக்குழுவின் அனுமதி முறைமை பற்றி உங்களுக்கு விளக்க விரும்புகின்றேன்.
2016 ம் ஆண்டுக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்டமானது நிதி ஆணைக்குழுவிடம் 29.02.2016 ற்கு முன்பு சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாத நடுப்பகுதியிலேயே திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படவேண்டிய தேவை இருப்பதால், இதற்குரிய விபரங்களை 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாத ஆரம்பத்திலேயே நிதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட வேண்டிய கட்டாயம் எமக்குண்டு. ஏனென்றால்
நடைமுறையில், மாகாணத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற வருடாந்த அபிவிருத்தித் திட்ட விபரங்களானது மார்ச் மாத இறுதிப்பகுதியில் அல்லது ஏப்பிரல் மாத முதல் வாரத்திலேயே அனுமதி கிடைக்கப்பெறுகின்றன.
சகல அமைச்சுச் செயலாளர்களும் வருடாந்த திட்டம் பற்றி கலந்தாலோசிப்பதற்கு மார்ச் மாதத்திலேயே நிதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படுகின்றனர். ஆகவே அனுமதிகள் கிடைக்கப்பெற்று நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஆகக்கூடியது 08 மாதகாலப்பகுதியே உள்ளது. அதிலும் பூர்வாங்க நடவடிக்கைகளுக்கு இரண்டு மாதங்கள் செலவாகின்றன. மழை இரண்டு மூன்று மாதங்களுக்கு எமது பணிகளைத் தடைசெய்கின்றது. எனவே வீணான கால தாமதத்தைத் தவிர்ப்பது இன்றியமையாததாகின்றது. ஆகவேதான் ஜனவரி மாத ஆரம்பத்தில் நிதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து அனுமதிபெற வேண்டிய கடப்பாட்டை நாங்கள் நோக்கியிருக்கின்றோம். எல்லோரும் சமமே என்று ஒன்பது மாகாண திட்டங்களும் வரும் வரையில் நிதி ஆணைக்குழு காத்து நிற்பது எம்மையே கூடியவாறு பாதிக்கின்றது.
மேலும் எமது கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தலும் அதற்காகப் புதிய நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானதாகும்.
தற்போது அனுமதிக்கப்பட்ட ஆளணி 34இ902 ஆகவும்
பாதீட்டில் உள்ளடக்கப்பட்ட ஆளணி 31இ466 ஆகவும் உள்ளன.
எனவே பதவி வெற்றிடங்கள் 3இ436 இருக்கின்றன.
ஆளணியைச் சீர்செய்வதன் மூலம் திட்ட அமுலாக்கல் நடவடிக்கையினை விரைவுபடுத்த முடியும் என்பதனைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இது பற்றிய மத்திய அரசின் சிரத்தையின்மை எம்மை வெகுவாகப் பாதிக்கின்றது. எனினும் சற்று மனமகிழ்வைத் தரும்விதமாக 2016 ஆம் ஆண்டில்; முத்திரை தீர்வைகட்டணம் மற்றும் நீதிமன்ற தண்டப்பணமாக ரூபா 170 மில்லியன் மாகாண இறைவரி திணைக்களத்தினால் வருமானமாகப் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்கான நிதி நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டு மாகாண இறைவரித் திணைக்களம் 2015.07.01 ஆம் திகதியிலிருந்து செயற்பட்டுவருகின்றது.
மேலும் ஒரு விடயத்தை உங்களுக்குக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். நிதிஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்வது இதுவரையான வழக்கமாகும். எனினும் 2016 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியானது கடந்த வருடங்களை போலல்லாது மாவட்ட அடிப்படையில் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண சபையானது ஏனைய சபைகளைப் போல் அல்லாது போரினால் பாதிக்கப்பட்டு வேறுபட்ட தேவைகளை உள்ளடக்கிய நிலையில் உள்ளது. எனவே மாவட்ட ரீதியாக ஒதுக்கீடு செய்யும் போது மாவட்டத்திற்குரிய தேவைகளை முன்னுரிமைப்படுத்தி பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது இவ்வருடத்தைய நிதி ஒதிக்கீட்டினால் நாம் முகம்கொடுக்க வேண்டிய ஒரு எதிர்மறைநிலையாகும்.
மாகாணத்திற்குரிய நிதியை ஒதுக்கீடு செய்வது நிதி ஆணைக்குழுவாக இருந்தாலும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட தேவைகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக நிதியினைபங்கீடு செய்யும் போது வடக்கு மாகாணத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக முன்னுரிமைப்படுத்தப்பட்டிருக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை.
மேலும் எமது மாகாணத்தின் முன்னுரிமையானது அமைச்சர் வாரியம் மற்றும் மாகாணசபையினால் அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்கின்ற சந்தர்ப்பத்திலுங் கூட சில கருத்திட்டங்கள் பிரமாணங்களுக்கு அமைவாக இல்லை என்ற காரணத்தினால் அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு கோருவது வீண்காலதாமதத்தை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் எமது மாகாணத்திற்குரிய தேவைகள் விசேடமானவையாக காணப்படுகின்றன. எனவே வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் மத்திய அரசாங்கமும் நிதி ஆணைக்குழுவும் மற்றைய மாகாணங்களுக்கு அவை வகுத்திருக்கும் பிரமாணங்களுக்கு அமைவாக இல்லாது எமது தேவைகள், முன்னுரிமைகள், குறைபாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் எடுத்து தேவையான விதத்தில் நிதி ஒதுக்கீட்டை ஆற்றுப்படுத்துவது அவசியம்.
இறுதியாக 3 வது வரவு செலவுத் திட்டத்தினை விதிமுறையாக 2016 ஆம் ஆண்டிற்கென இத்தருணத்தில் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
2016ஆம் நிதியாண்டிற்கு எமது மாகாணசபை செலவீனங்களுக்காக நிதி ஆணைக்குழுவினால் தேசிய வரவுசெலவுத்திட்ட திணைக்களத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகைகள் மற்றும் மாகாண வருமானத் திணைக்களத்தின் வருமான மதிப்பீடுகளுக்கு அமைவாகப் பின்வருமாறு.
1. மீண்டு வரும் செலவினங்களுக்காக முன்னர் கூறியது போன்று ரூபா 18,574.23 மில்லியன் ரூபாய்களும்
2. உள்ளுராட்சி மன்றங்களுக்கு மாற்றுவதற்கான முத்திரை தீர்வைக் கட்டணமாக ரூபா 160 மில்லியன் ரூபாய்களும் நீதிமன்ற தண்டப்பணமாக ரூபா 10 மில்லியன் ரூபாய்களும்
3. மூலதன செலவினங்களுக்காக 4,695.65 மில்லியன் ரூபாய்களும் இதில்
பிரமாண அடிப்படையிலான கொடை ரூபா 475 மில்லியனும்,
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை ரூபா 3,199.30 மில்லியனும்
பாடசாலைக் கல்வியை ஓர் அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்திட்டத்திற்காக (வுளுநுP) ரூபா 465 மில்லியனும்;
சுகாதாரத்துறை அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக ரூபா 365 மில்லியனும்;
யுனிசெப்பின் கருத்திட்டத்திற்காக ரூபா 11.35 மில்லியனும்;
கைதடியிலுள்ள மாகாண சபைக் கட்டிட தொகுதிக்காக ரூபா 150 மில்லியனும்;; ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமூக கூட்டுப்பொறுப்பு நன்கொடை ரூபா 30 மில்லியன் விவசாய அமைச்சின் கீழ் |சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கிடப்படுகிறது.
ஏனைய திட்டங்களாக வடக்கு வீதி இணைப்பு அபிவிருத்தித் திட்டம், இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் மற்றும் யாழப்பாணம் கிளிநொச்சி நீர்விநியோகத்திற்கும் சுகாதார மேம்பாட்டிற்குமான கருத்திட்டம் ரூபா 4,152.35 மில்லியனும்; மத்திய அரசின் நேரடி நிதி ஆளுகையில் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.”
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila