மஹிந்த ஆட்சியைப் போன்று மைத்திரி ஆட்சியிலும் கடத்தல் சித்திரவதைகள் தொடர்கின்றன
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நிலவிய ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைகள் என்பன இந்த நல்லாட்சிக்கான அரசாங்கத்திலும் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், நுணாவில் ஜெயந்தனின் கடத்தல் சம்பவம் இதனைச் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் குறிப்பிட்டார். சாவகச்சேரி வெள்ளை வான் கடத்தல் சம்பவம் தொடர்பில், நுணாவிலில் உள்ள ஜெயந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடைய தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதனைத் தொடர்ந்து உடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ‘சிவில் உடையில் வந்தவர்கள், அவரை வெள்ளை வானில் கடத்திச் சென்றுள்ளார்கள். அவரை அவ்கள் எங்கு கொண்டு சென்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவரைக் கைது செய்வது என்றால் அதனை அத்தாட்சிப்படுத்தி ரசீது வழங்கப்பட வேண்டும். அவ்வாறாக எந்தவிதமான ஆவணமும் இந்தச் சம்பவத்தில் வழங்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழியிலேயே, மைத்திரிபால சிறிசேனவின் அசராங்கமும் செல்கின்றது. வெள்ளை வான் கடத்தல்களும், சித்திரவதைகளும் தொடர்கின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் என்று தேர்தலில் ஆதரவாக வாக்களித்த தமிழ் மக்கள் மீது இந்த அரசாங்கமும் கெடுபிடிகளையே பயன்படுத்துகின்றது. இந்த அரசாங்கம் நல்ல அரசாங்கம் எனக் கூறி அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், அதன் தலைவர் ஆர்.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் இந்த அரசாங்கத்தின் ஆட்கடத்தல், சித்திரவதை சம்பவங்களுக்குத் துணைபோயிருக்கின்றார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை’ என்றும் கூறினார்.
Related Post:
Add Comments