உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர உரிமையுண்டு


தாயக மண்ணில் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருவதற்கு, எல்லாவித உரிமைகளும் உண்டெனவும், அதனடிப்படையில் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலிலும் வாகரையிலும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

‘தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் நடைபெறவுள்ளன.

வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அன்றைய தினம் காலை 10 மணிக்கும் மேற்படி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இன அழிப்பு ஒன்றின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளான மே 18 என்பது, தமிழரது சரித்திரத்தில் மறக்க முடியாத கறைபடிந்த நாளாகும். அந்த நாள் தமிழினம் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட இனவழிப்பு தினமாகும். தாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவுகூருவதற்கான உரிமை எமக்குள்ளது.

இறந்தவர்களது ஆத்ம சாந்திக்காக முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை அமைதியான வழியில் அனைவரையும் கடைப்பிடிக்குமாறு கோருவதுடன், முள்ளிவாய்க்காலிலும், வாகரையிலும் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் பங்குகொள்ளுமாறும் அழைக்கின்றோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila