ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் வருகையை ஒட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இராணுவத்தின் தண்ணீர் பவுசர் வாகனம் மோதியதில் குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்றையதினம் காலை யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயம் முன்பாக இடம்பெற்றுள் ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இவரது விஜயத்திற்கு கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதன்போது பிரதான வீதியிலிருந்து இரண்டாம் குறுக்கு வீதியூடாக இராணுவத் தின் தண்ணீர் பவுசர் வாகனம் ஒன்று யாழ். ஆஸ்பத்திரி வீதிக்கு சென்று கொண்டிருந்தது.
இதன் போது மனிதவுரிமை ஆணைக் குழுவின் வலது பக்க ஒழுங்கையிலிருந்து இரண்டாம் குறுக்கு வீதிக்கு ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் தாயும், மகளும் வந்து கொண்டுள்ளனர். இதன்போது மிக வேகமாக வந்த இராணுவத்தின் தண்ணீர் பவுசர் வாகனம், வீதியை கடக்க முயன்ற குறித்த இருவர் மீதும் மோதியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் இராணுவ வாகனத்தின் கீழ் நசிந்த நிலையில் குறித்த தாயாரும் பின் பக்க சில்லுக்குள் நசிபட்டுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே சிவராசா சௌந்தரராணி (வயது 52) எனும் பெயருடைய தாயார் உயிரிழந்துள்ளார். இவரது இருபத்தி நான்கு வயதுடைய சிவராசா சங்கீதா எனும் அவரது மகள் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து இடம்பெற்றதும் சம்பவ இடத்திற்கு வந்த இராணுவ உயர் அதிகாரிகள்,
இராணுவத்தின் தண்ணீர் பவுசர் வாகனத்தை அங்கிருந்து உடன் கொண்டு செல்ல முயற்சித்த நிலையில், அங்கு கூடிய பொது மக்களுடன் சமரச முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தனர். எனினும் அங்கு நின்ற இராணுவத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஒரு ஒழுங்கையில் இந்தளவிற்கு வேகமாக ஓட முடியுமா? எனவும் அவர்கள் கோபமடைந்தனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார், விபத்து நடந்த இரு வாகனங்களையும் அங்கிருந்து எடுத்து சென்றனர்.
விபத்து நடைபெற்று சிறு நேரத்திற்குள்ளேயே அங்கு பெருமளவிலான இராணுவமும் பொலிசார் மற்றும் புலனாய்வுத்துறையும் அங்கு கூடியிருந்ததை காணமுடிந்தது.