ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி வரை நடை பெறவுள்ள இக்கூட்டத் தொடரில் இலங்கை நிலைவரம் தொடர்பான பிரதான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமையின் காரணமாக இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் மிக்க கூட்டத் தொடராக இது காணப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சபையின் 32 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தலைமையிலான குழுவினரும் ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளனர்.
எதிர்வரும் 29 ஆம் திகதியே இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் குசைனினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனிவா பயணமாகவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் 29 ஆம் திகதி உரையாற்றவுள்ளதுடன் உள்ளக விசாரணை பொறிமுறையின் தற் போதைய நிலைமை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
அத்துடன் இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவலவும் இலங்கையின் சார்பில் கலந்துகொள்ளவுள்ளார். மேலும் அரசாங்க உயர் அதிகாரிகள் மட்டக் குழுவும் இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளது.
ஜூன் மாதம் 29 ஆம் திகதி இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் குசைனினால் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அந்த அறிக்கையில் நாட் டின் மனித உரிமை நிலைமை தொடர்பாக தான் மேற்கொண்ட மதிப்பீடு குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை வந்திருந்த செய்ட் அல் குசைன் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்த மதிப்பீட்டை செய்திருந்தார். அந்தவகையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையா ளரின் இலங்கை குறித்த வாய்மூல அறிக்கை மிகவும் முக்கியத்துவமிக்கதாக அமையும் என கூறப்படுகின்றது.
இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா என்ற விடயம் முக்கியம் இடம்பிடிக்கும் என கூறப்படுகின்றது.
எனினும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து முன் னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எக்காரணம் கொண்டும் வெளிநாட்டு நீதிபதி கள் உள்வாங்கப்படமாட்டார்கள் என்றும் உள்நாட்டு நீதிபதிகளை கொண்டே விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.
இதேவேளை சர்வதேச நீதிபதிகளை எக்காரணம் கொண்டும் உள்ளக விசாரணை பொறிமுறையில் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்றும் உள்ளக நீதிபதிகளைக் கொண்டு விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வலுவான முறையில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்த இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு மங்கள சமரவீரவினால் ஜெனிவாவில் முன்வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் கலந்துகொள்ளவுள்ள பிரதிநிதிகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் குசைனை சந்தித்துப் பேச்சு நட த்தவுள்ளனர்.