வலி வடக்கில் பொதுமக்கள் மீள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் நிரந்தரமாக்கப்படும் இராணுவ முகாம்களால் அப்ப குதிகளில் உள்ள பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வலி.வடக்கு வசாவிளான் ஒட்டகப்புலம் பகுதியிலேயே அமைந்துள்ள இராணுவ முகாமின் பிரதான நுழை வாயில் மற்றும் இராணுவ முகாம் நிரந்தரமாக கட்டப்பட்டு வருகிறது.
அதாவது பலாலி வடக்கு பகுதியில் உள்ள 42 ஏக்கரும் வசாவிளான் கிழக்கு பகுதியில் 47 ஏக்கரும் உட்பட 200 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமான 89 ஏக்கர் காணியினை படையினர் சுவீகரிக்கும் நோக்கில் நிரந்தரமாக முட்கம்பி வேலிகளை அமைத்தும், பாரிய வாயிற் துண்களை நிறுவியும் வருகின்றனர்.
கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த இப்பகுதி கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதற்கட்டமாக விடுவிக்கும் பகுதிகளில் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆனால் குறித்த ஒட்கப்புலம் பகுதி முழுமையாக இராணுவத்தினர்வசமே இருந்து வருகின்றது.
இராணுவத்தின் 511 ஆவது படையணி மற்றும் 07 ஆவது கஜயபாகு படையணி இங்கு நிலைகொண்டுள்ளன. குறித்த இரு இராணுவ முகாம்களும் வீதியின் இருபக்கத்திலும் காணப்படுகின்றன. வீதி மக்களின் பாவனைக்கு விடுபட்டுள்ளது. வசாவிளான் பகுதியில் பொதுமக்களின் பாவனைக்கு விடுபட்டிருந்தாலும், அவர்கள் முழுமையான பயனை அனுபவிக்க முடியவில்லை.
வடக்கு எல்லையில் பலாலி பாதுகாப்பு தலைமையகமும், தெற்கு, மேற்கே இவ்விரு படையணிகளும் நிலை கொண்டுள்ளதால், மீள்குடியேறிய மக்கள் இராணுவ கட்டமைப்புக்குள் வாழ்வது போன்ற எண்ணப்பாடு தோன்றியுள்ளது. இது மீள்குடியேறிய மக்கள் மத்தியிலும், பூர்வீக காணி உரிமையாளர்கள் மத்தியிலும் அச்சமான எண்ணப்பாட்டினை இது தோற்றிவித்துள்ளது.இதனை நிரந்தரமாக சுவீகரிக்கும் நிலை காணப்படுகின்றது.
இதேவேளை, மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை அண்மித்த பகுதிகளில் காணப்படும் இராணுவ முகாம்கள் நிரந்தரமாக்கப்பட்டு வருவதனால், பொதுமக்களின் ஏனைய நிலங்கள் விடுவிக்கப்படுமா என்ற எண்ணப்பாடு காணி உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.