தரமாக வாழ்ந்த தமிழினம் தரங்கெட்டு வாழ்வதை அனுமதிக்க முடியாது : சி.வி

CV

தரமான வாழ்வு வாழ்ந்த தமிழ் மக்கள், தரங்கெட்டு வாழ்வதற்கு இடமளிக்கக் கூடாதென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடி மேற்கில் அமைந்துள்ள சரஸ்வரதி சனசமூக நிலையத்தின் புதிய கட்டிட திறப்புவிழா, இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- ”போரானது எம்மை பெருத்த அழிவுகளுக்குள் இட்டுச் சென்றாலும், உலக அரங்கில் ‘நாம் தமிழர்’ என்ற அடையாளத்தையும் பொறிப்பதற்கு உதவி செய்துள்ளது. மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிய நாட்கள் போய், பிறநாட்டு நல்லறிஞர்கள் எம்மை வெகுவாக புகழ்ந்து பேசும் நிலையை அடைந்துள்ளோம். எனினும், இன்று எமது பட்டினத்து இளைய சமுதாயம், நகர்ப்புற நாகரீக பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். போதைப்பொருள் பாவனை மட்டுமல்ல கலாசார சீரழிவுகளுக்கும் அவர்கள் காரணமாக இருந்து வருகின்றார்கள். நேற்றைய தினத்தை பற்றியோ எதிர்காலத்தை பற்றியோ சிந்தனை இல்லாமல் ‘சாப்பிடுங்கள், குடியுங்கள், உற்சாகமாய் இன்றிருங்கள்’ என்ற மனோநிலையில் வாழத் தலைப்பட்டுள்ளார்கள். இது எமது அழிவுக்கு வித்திடும் அறிவற்ற செயலாகும். தரமான வாழ்வு வாழ்ந்த எமது தமிழ் மக்கள், இவ்வாறு தரங்கெட்டு வாழ்வதற்கு இடமளிக்க முடியாது. கிராம மக்களே, கிராம இளைஞர் யுவதிகளே, எமது பாரம்பரியங்களை பேணிப் பாதுகாக்க நீங்கள் முன்வர வேண்டும். நவீனத்தை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறையே எமது வாழ்க்கை முறையாக அமைய வேண்டும். பணமும், பகட்டுமே வாழ்க்கை என்றிருப்பவர்களது வாழ்க்கையில், நல்ல பண்பையும் பணிசெய்யும் பாங்கையும் உட்புகுத்த வேண்டும். அந்தவகையில், சரஸ்வதி சனசமூக நிலையமானது, நிலையான பண்புகளை நிலைநாட்டுவதற்கு முன்னின்று முயற்சிப்பது எமக்கெல்லாம் பெருமை சேர்க்கின்றது” என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila