இலங்கையின் வடபகுதியில் 2018ஆம் ஆண்டு இராணுவத்தினர் இருக்கமாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். அப்படியானால் அவர்கள் வெளியேறும்போது விகாரைகளையும் கொண்டு செல்லட்டும் என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவானது பாரம்பரிய தமிழ்க் கிராமம் ஆகும். யுத்தத்திற்கு முன்பு எந்தவொரு இடத்தில் பௌத்த அடையாளங்கள் இருந்ததில்லை. தற்போது இராணுவத்தினரால் ஒன்பது விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலப்போக்கில் இது இன்னமும் அதிகரிக்கப்படலாம். நல்லிணக்கம் எனப் பெரிதாகக் கூறிக்கொண்டு மதத்திணிப்பைச் செய்கின்றார்கள்.
கொக்கிளாயில் பௌத்தர்கள் இல்லை. சிறீ சம்போதி மகா விகாரை தனியார் காணியில் முளைத்துள்ளது. நாயாறு நீராவியடியில் பிள்ளையாரைத் தூக்கியெறிந்துவிட்டு புத்தரை வைத்துள்ளார்கள். மாங்குளத்தில் விகாரை, மண்ணாகண்டலில் விகாரை, ஏன்? தனிச் சைவக் கிராமம் வட்டுவாகலில் விகாரை, ஒட்டுசுட்டானில் நீர்ப்பாசனத்திணைக்களக் காணியில் விகாரை இதனால் நீர்ப்பாசனத்திணைக்களமும் அகதியாகி இருக்கின்றது.
இப்படியாக எம்மவர்கள் காணிகளை அடாத்தாகப் பிடித்துக்கொண்டு நல்லிணக்கம் பேசுகின்றார்கள். 2018இல் வடக்கில் இராணுவம் இருக்காது என வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார்.
இந்த நல்லிணக்கம் ஐநாவுக்குப் பயந்து நடக்குமானால், அவர்கள் போகும்போது விகாரைகளையும் கொண்டுபோகட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.