வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என்பது குறித்த கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி அநுராதபுரம் மாவட்டத்தில் அதனை நிறுவும் முயற்சியில் மத்திய அரசாங்க த்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்க ப்படுகிறது.
இந்த நிலையில் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க தவறும் பட்சத்தில் மாங்குளத்தில் அமைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம், வட மாகாண நிர்வாக கட்டமைப்பின் கீழ் நிதி நிறுவனம் ஒன்றை அமைத்தல் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட மூன்று விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய குழு ஒன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோரை நேற்று திங்கட்கிழமை சந்தித்தது
இந்த சந்திப்பு யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் காலை 9.30 முதல் முற்பகல் 11.15வரை இடம்பெற்றது.
சந்திப்பில் வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள அரச உத்தியோகஸ்தர்கள், விவசாய அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் கலந்துகொண்டனர்.
இதன்போதே வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியா – ஓமந்தையில் அமைக்க தவறும் பட்சத்தில் மாங்குளத்தில் அமைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.