யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் குடிநீருடன் கழிவு எண்ணை கலப்பிற்கு காரணமான நொதேண் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவை வழங்கியுள்ளது.
சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையம் சார்பாக பேராசிரியர் ரவீந்திர காரியவசம் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருக்கிறது.
2010ஆம் சுன்னாகம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட நொதேன் பவர் மின்னுற்பத்தி நிலையத்தினால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணமாக குறித்த நிறுவனம் அமைந்திருந்த பிரதேசங்கள் அனைத்தும் குடிநீருடன் கழிவு எண்ணெய் கலந்தது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குடிநீருக்கு பெரும் சிரமத்தை தற்போதும் எதிர்கொண்டுவருவதோடு, இந்த கழிவு கலந்த குடிநீரைப் பருகுவதனால் உயிராபத்துக்களும், பக்கவிளைவுகளும் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில் நோர்தன் பவர் நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு எதிராக சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையம் சார்பாக பேராசிரியர் ரவீந்திர காரியவசம் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
இதில், மத்திய சூழல் அதிகாரசபை, இலங்கை மின்சாரசபை, வடக்கு மாகாண முதலமைச்சர், சுன்னாகம் நொதேண்பவர் நிறுவனம், இலங்கை முதலீட்டுச் சபை, வலிகாமம் பிரதேச சபைத் தலைவர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் தலைமையிலான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான புனநேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் தலைமையிலான குழு முன்பாக நேற்றைய தினம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, நொதேண்பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்து உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இதன்மீதான அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.