ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தமிழ் மக்களும் கூட ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால், தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி நகைப்புக்குள்ளாகியுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில், கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதா? அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிப்பதா? என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.