இனி அரசுடன் கடும் போக்கினில் பேச்சென்கிறார் மாவை!

Mavai senathirajah

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பினில் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லையென மாவை சேனாதிராசாவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.எனினும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் விரைவில் நல்லாட்சி அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது அரசியல் கைதிகள் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பினில் தமது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.
அங்கு பதிலளித்த மாவை தமிழ்த் தேசிய கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்க காரணமாயிருந்தது.தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பலம் பொருந்திய கட்சி தமிழ் அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து எந்தவித செயற் திறன் மிக்க நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. வாக்குறுதிகளை வழங்கியபடி, தமது செயற்பாடுகளையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றதென தெரிவித்திருந்தார்.
இதன்போது ஏன் இந்த அரசாங்கத்திடம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான, நடவடிக்கைகளை மேற்கொள்ள த.தே.கூ நிபந்தனைகளை விதிக்கவில்லை என அரசியல் கைதிகள் கேள்வி எழுப்பினர்.
கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்த போது, விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தும் இதுவரையில் கைதிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்காது இருப்பது மிகுந்த வேதனை தருகின்றது.
பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ய த.தே.கூ வலியுறுத்த வேண்டுமென அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நல்லாட்சி அரசுடன் பல தடவைகள் பேசியிருக்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பா டுகள் அடிப்படையில் பெரும் சவால் மிக்க பிரச்சினையாக உள்ளது.
எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை. மிக விரைவில், இறுக்கமான பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். அதில், காணாமல் ஆக்கப்பட்டோர், காணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் என்றார்.

மேலும் அந்த பேச்சுவார்த்தை மிகவும் கடினமான பேச்சுவார்த்தையாக இருக்குமென்றும் தெரிவித்துள்ளதுடன், நம்பிக்கையுடன் இருக்குமாறும், உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila