ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவதா? உடனடியாக பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும்!

தமிழ்க்கவி எழுதிய கிளிநொச்சியும் மலையக மக்களும் என்ற கட்டுரையானது மலையக சமூகத்தை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என்றும் இதன் எழுத்தாளர் மற்றும் வெளியீடு செய்த கலாச்சார பேரவை என்பன பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் தலைவர் க.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக அமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,


கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட கரைஎழில் 2016 எனும் வரலாற்று நூலில் தமிழ்க்கவி எழுதிய கட்டுரையானது மலையக மக்களை புண்படுத்தும் வகையில் மிக திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கட்டுரை தொடர்பில் கலாச்சார பேரவையும் அதன் எழுத்தாளரும் பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும்.
கரைஎழில் 2016 நூல் அனைத்தும் மீளப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி கடிதங்களை அனுப்பியிருந்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
மாறாக தமிழ்க்கவி என்ற எழுத்தாளர் குறித்த கட்டுரை தொடர்பில் மனம் வருந்துவதாக மாத்திரம் ஒரு கடிதத்தை முகநூல் ஊடாக வெளியிட்டுள்ளதாக அறிகின்றோம்.
எனவே இந்த செயற்பாடானது திட்டமிட்டு கலாச்சாரப்பேரவை என்ற பெயரில் அரச பணத்தை செலவிட்டு எமது சமூகத்தை இழிவுப்படுத்தும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட சதியாகவே இது அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila