ஜனாதிபதியின் செயலாளர் எம்மை சந்திப்பார் என நாங்கள் நம்பியிருந்த நிலையில், இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் எங்களை சந்தித்தமை எமக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கூறியுள்ளனர். |
இன்று 49 ஆவது நாளாக யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ச்சியான வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களை ஜனாதிபதியின் செயலாளர் சந்திக்கவுள்ளார் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக நேற்று இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் மனோல பெரேரா வருகை தந்ததால், பட்டதாரிகள் ஏமாற்றமடைந்தனர். இது தொடர்பாக பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கத்திற்கும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சந்திப்பாகவே இந்த சந்திப்பு அமைந்துள்ளது. நாங்கள் ஜனாதிபதியின் செயலாளர் வருவார் என நம்பியிருந்தோம்.கடந்த 48 நாட்களாக நாங்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஒரு நியாயம் கிடைக்கும் எமது கோரிக்கையும் நிறைவேற்றப்படும் எனவும் எதிர்பார்த்திருந்தோம் ஆனால் அது நடக்கவில்லை. நீங்கள் போராட்டம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக வந்திருக்கின்றீர்கள் இது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது” என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மேலும் தெரிவித்தனர். இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. |
ஜனாதிபதியின் செயலாளர் வராததால் வடக்கு பட்டதாரிகள் ஏமாற்றம்!
Add Comments