முல்லைதீவினை சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மைத்திரியின் சொந்த ஊரான பொலன்னறுவையில் பேருந்திலிருந்து அடித்து இழுத்து வீதியில் வீசப்பட்டுள்ளார்.அவ்வாறு தாக்கப்பட்ட தமிழ் பொதுமகன் தொடர்ந்தும் அபாயகரமான நிலையினில் வெலிக்கந்த வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை 15ம் திகதி இரவு 10.20 மணியளவில் பொலன்னறுவ,செவனப்பிட்டிய எனும் இடத்தில் வைத்து இத்தாக்குதல் இடம்பெற்றது. முச்சக்கரவண்டியொன்றை வீதிக்குக் குறுக்கே நிறுத்தி பேருந்தை சுற்றி வளைத்த ஏழுக்கும் மேற்பட்ட சிங்கள காடையர்களே வவுனியாவிலிருந்து மட்டக்களப்பை நோக்கிப் பிரயாணித்த தமிழர் ஒருவரை இவ்வாறு பலவந்தமாக அடித்து இழுத்துச் சென்று தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
பலமாக தலையில் தாக்கப்பட்டு உணர்வற்ற நிலையில் வீதியோரத்தில் வீசப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த இந்தப் பிரயாணியை சக பிரயாணிகளும் நடத்துனரும் உடனடியாக வெலிக்கந்த வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். பின்னர் உடனடியாக இவர் அம்புலன்ஸ் வண்டி மூலமாக மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவ பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்திலேயே இச்சம்பவம் நடந்தேறியது. இக்குற்றச்செயலை சர்வசாதாரணமாகவும் துணிகரமாகவும் மேற்கொண்ட காடையர்கள் ஏ.பீ. கே 6097 இலக்க முச்சக்கரவண்டியிலேயே தப்பிச் சென்றனர். மிகவும் அச்சமடைந்த பிரயாணிகள் அண்மையிலுள்ள இலங்கை காவல் நிலையங்களைத் உடன் தொடர்பு கொண்ட போதும் 45 நிமிடங்களின் பின்னரேயே காவல்துறையினர் சமுகமளித்திருந்தனர். வவுனியாவிலிருந்து பேருந்தில் ஏறிய செவனப்பிட்டியைச் சேர்ந்த சிங்களவா ஒருவருக்கும் பாதிக்கப்பட்ட பிரயாணிக்கும் இடையில் வவுனியாவில் வைத்து பேருந்தில் ஏற்பட்ட சிறியதொரு வாக்குவாதத்துக்கு பழிதீர்க்கவே இச்சம்பவம் இடம்பெற்றதாக தாக்குதல் நடத்தியவர்கள் சத்தமிட்டுச் சென்றிருந்தனர்.