பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபைக் கொண்டு வருவது குறித்து தகவல்கள் வெளிவந்த போதே அதனை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
எனினும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு பற்றி அறியாமல் அதனை எதிர்க்கமுடியாதென்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறினர்.
இப்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அதிர்ச்சியையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.
இதுதான் எங்களிடம் இருக்கக்கூடிய ஒரே பிரச்சினை. எதையும் வருவதற்கு முன்னர் தடுக்கும் உபாயம் எங்களிடம் அறவே இல்லை.
வந்த பின்பு எதிர்ப்பதென்பது ஒரு சம்பிரதாய சடங்காக இருக்கிறதேயன்றி, அதனால் பிரயோசனமும் இல்லை என்பதுதான் உண்மை.
அதிலும் நல்லாட்சி எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு தரும். இரண்டு வாரங்களில் அந்தத் தீர்வு பற்றிய விடயங்கள் வெளிவரும் என்ற நம்பிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கூறியிருக்கின்ற நிலையில்,
பயங்கரவாத தடுப்புச் சட்ட வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனில், எங்களைக் கொண்டே எங்களை ஏமாற்றுகின்ற இராஜதந்திரம் மிகச் சிறப்பாக நடந்தேறுவதை நாம் காணமுடியும்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில்,
நல்லாட்சியின் தீர்மானங்கள், முடிவுகள் அமைச்சரவை அனுமதிகளைப் பார்க்கும் போது அவை தமிழ் இனத்துக்கு எதிராக இருப்பதை அவதானிக்க முடியும்.
பொதுவில் தமிழினத்தை சிங்கள ஆட்சியாளர்கள் இவ்வண்ணமே ஏமாற்றி வந்துள்ளனர். எங்கள் அரசியல் தலைமைகளும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைச் சந்தித்து விட்டால்,
மனம் நெகிழ்ந்து எங்கள் மக்களின் பிரச்சினைகளை மறந்து ஆளுந்தரப்பிடம் சரணாகதியடைந்து விடுவர்.
இந்த நுட்பத்தை மிகச் சிறப்பாகச் செய்து வரும் இலங்கை ஆட்சியாளர்கள் இப்போதும் அதனைச் செய்கின்றனர்.
ஆக, தமிழினம் ஒவ்வொரு தடவையும் சிங்கள ஆட்சியாளர்களின் தந்திரத்துக்குள் வீழ்ந்து ஏமாறுவதை வழமையாகக் கொண்டுள்ளதால் எங்களுக்கு ஒருபோதும் விமோசனம் இல்லை என்றாகிவிட்டது.