இளைஞர்களினது தமிழ் தேசிய உணர்வுடனான ஒன்று திரள்வால் வடக்கு மாகாண அரசியலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அதனை பேரம் பேச கே.சிவாஜிலிங்கம் களமிறங்கியுள்ளமை கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவைத்தலைவர் சீ.வி,கே.சிவஞானத்தை காப்பாற்ற தன்னிச்சையாக கே.சிவாஜிலிங்கம் தரகராக களமிறங்கியுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
“வடக்கு மாகாணசபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்களின் பங்கேற்புடன் சுமுகமாக தீர்வு காணப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், அவைத் தலைவர் விவகாரத்தையோ, பிரதி அவைத் தலைவர் விவகாரத்தையோ, பிரச்சினையாக்குவது அர்த்தமற்றதென சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்துடன் நடந்த இரகசிய பேரத்தை அடுத்தே சிவாஜலிங்கம் யேசுபிரான் ஆகி பொதுமன்னிப்பு வழங்க முன்வந்துள்ளதாக தெரியவருகின்றது.அதற்கு பதிலீடாக அமைச்சுப்பதவியொன்றிற்கு பேரம் நடந்ததாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த விடயங்களை மீண்டும் கிளறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில், அனைத்து உறுப்பினர்களும் இணைந்து செயற்பட எதிர்பார்க்கிறோம். வரும் 22ஆம் நாள் வடக்கு மாகாணசபையின் அமர்வு இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக, நாளை காலை, அவை நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்படும். அதேவேளை, நாளை பிற்பகல் அமைச்சர்கள் வாரியக் கூட்டமும் இடம்பெறவுள்ளது. விசாரணைக் குழுவினாரல் குற்றம்சாட்டப்படாத அமைச்சர்கள் இருவரும் நாளை தமது பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் பேரவை தலைவர் மாற்றப்படவேண்டுமென வலியுறுத்தி வருகின்ற நிலையினில் சிவாஜிலிங்கத்தின் குறுக்கோட்டம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Add Comments