'எமது உறவுகளை தேடி, நாம் அஹிம்சை வழியில் மேற்கொள்ளும் போராட்டங்கள் அரச புலனாய்வு துறையினரால் கண்காணிக்கப்படுவதானது இன்னும் தொடர்கின்றது.இந்த செயற்பாடானது பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் பாதிப்படைய செய்கின்றது. கைதுகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் ஆகியவற்றுக்கு தகுந்த ஆதாரங்கள் காணப்பட்ட போதும் விசாரணைகள் தாமதமாவது ஏன்? விசேட விசாரணை குழுக்கள் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட போதும் அவர்களது விசாரணை பக்கச்சார்பாக காணப்பட்டமை நீதி தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட எமது உறவுகள் வீடுகளில் உணவருந்தி கொண்டிருந்த போதும், வயல் மற்றும் தொழில் செய்யும் இடங்களிலும், ஏன் வீதியில் பயணம் செய்யும் போதும் மனைவி பிள்ளைகள் தாய் தகப்பன் நண்பர் உறவினர் முன்னிலையில் வலிந்து இழுத்துச்செல்லப்பட்டனர்.இவர்கள் ஆயுதக்குழுவுடன் எவ்வித தொடர்புமற்றவர்களாவர். வீட்டில் உணவருந்திக்கொண்டிருந்த போது வெள்ளை வானில் வந்த அதிரடிப்படை என இனங்காணப்பட்டோரால் இழுத்துச்செல்லப்பட்ட கணவனை தேடி, அதிரடிப்படை முகாமுக்கு மகனை அழைத்து சென்ற தாய், கணவனுடன் மகனையும் தொலைத்த நிலை எமது கண்ணீர் வரலாறுகளுக்கு உதாரணமாகும். எனவே, எமது உறவுகளின் இன்றைய நிலை தொடர்பான உண்மையானதும் நீதியானதும் விரைவானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எமக்கு தகவலும் நீதியும் வழங்கப்படவேண்டும். எமது உறவுகள் எம்முடன் இணைக்கப்பட வேண்டும். மாறாக கடந்த காலங்களில், தமிழ் மக்களுக்கு எதிராக துணைப்படையுனருடன் இணைந்து இலங்கை அதிரடிப்படையினர், இராணுவத்தினர், புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களுக்குக்கான நீதி இதுவரை கிடைக்காத நிலையில், அண்மையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக நீதி எமக்கு வழங்கப்படுமா? என்கின்ற கேள்வி எமக்குள் எழுகின்றது. அத்துடன் கடந்த காலத்தில் நடைபெற்ற பின்வரும் சம்பவங்கள் தொடர்பாகவும் கருத்தில் எடுக்கப்பட வேண்டியதும் அவசியமாகும். 1. 1990.08.09ஆம் திகதி அன்று புனானை மயிலம்கரச்சி என்னும் பகுதியில் 39 பேர் காணாமல் ஆக்கப்பட்டனர். 2. 1990.02.08ம் திகதி மூன்று தடவைகள் சுற்றிவழைப்பு மேற்கொள்ளப்பட்டு சித்தாண்டி முருகன் கோவிலில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்த 89ஆண்கள் இராணுவத்தினரால் கைது செய்ப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். 3. 1990.09.09ம் திகதி சத்துருக்கொண்டானில் சிறுவர்கள், பெண்கள், கற்பிணித்தாய்மார், முதியோர், வலதுகுறைந்தோர், ஆண்கள், யுவதிகள் 186 பேர் இராணுவத்தினரால் சுற்றிவழைப்பில் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். 4. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாகரையில் 11 பேர் காணாமல் செய்யப்பட்டனர். 5. 1990.09.20ஆம் திகதி சவுக்கடியில் 67பேர் இராணுவத்தினரால் சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அழைத்து செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். 6. கடந்த 1990.09.05 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதிகளாக இடடம் பெயர்ந்து தஞ்சம் புகுந்திருந்த மக்களை சுற்றி வளைத்து அதில் குறிப்பாக 158 இளம் வயது ஆண்களை வற்புறுத்தலில் கைதி செய்து கொண்டு சென்றனர். மேற்கூறப்பட்டவை சில உதாரணங்களே ஆகும். நாங்கள் பலதடவைகள் குரல் கொடுத்திருந்த போதும், எதிர்பார்க்கும்நீதி மற்றும் தங்களால் வழங்கப்பட்ட வாக்குறிதி எனபன இதுவரை காலமும் நிறைவேற்றவில்லை என்பதனை வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம். ஆயினும் இனத்துவ ஒருமையை விரும்புவதாக தெரிவிக்கும் தாங்களது நல்லாட்சியில் இனிமேலும் பாகுபாடுகளை நாம் உணராதவாறு தங்களது உற்ற உறவாக எம்மை கருதி காலதாமதமின்றி எமக்கான நீதி கிடைக்க உதவுவீர்கள் என நம்புகின்றோம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். |
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை!
Related Post:
Add Comments