இதய சுத்தியுடன் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு மிகவிரைவில் தீர்வு காணக்கூடிய கட்சியையோ, குழுவையோ இனம் கண்டு அவர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் சார்பில் அதன் தலைவர் அருட்திரு எஸ்.வி.பி.மங்களராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்
|
உள்ளூர் அதிகார சபையின் முக்கியமான பொறுப்பு நகர கிராம உட்கட்டமைப்பு, மக்களின் வேலை வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்தல், மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை வகுத்தலும் செயல்படுத்தல் போன்றவையாக இருந்தாலும் தற்போதைய நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை, காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம் ஆகிய பிரச்சனைகள் இன்றும் பூதாகாரமாக உள்ளன. கடந்த ஒரு வருடமாக இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் நடத்திவரும் அமைதிப்போராட்டம் கண்டுகொள்ளப்படாமையே நீடிக்கின்றது. எனவே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டால் தான் நல்லிணக்கமும், அபிவிருத்தியும் ஏற்படும்.
எனவே இவை சம்பந்தமாக இதய சுத்தியுடன் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு மிகவிரைவில் தீர்வு காணக்கூடிய கட்சியையோ, குழுவையோ இனம் கண்டு அவர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள்.
ஒரு நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளிலொன்று வாக்குரிமை. இதனைப் பொறுப்புடன் நிறைவேற்றுவது குடிமக்களது சமூகப் பொறுப்பும் கடமையுமாகும்.இடம்பெறவிருக்கும் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில் வாக்குரிமையுள்ள ஒவ்வொருவரும் தமது வாக்குகளைப் பொறுப்புடன் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். புதிய உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல்கள் சட்டத்தில் இதுவரை இருந்து வந்த விருப்பு வாக்குமுறை இரத்தாகின்றது.
அத்துடன் பெண்களுக்காக 25வீதப் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னைய சந்தர்ப்பங்களில் பல்வேறு தேர்தல்களிலும் பெண்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்று பல்வேறு மட்டங்களிலும் பேசப்பட்ட போதும் நடைமுறையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மிகவும் குறைவா கவேயிருந்து வந்துள்ளது.
தற்போது பெண்களுக்கான பிரதிநிதித்துவம் திருத்தப்பட்ட சட்டத்தின் படி 25வீதம் (அதற்கு மேலும் இருக்கலாம்) ஆக உறுதி செய்யப்பட்டமை வரவேற்கப்பட வேண்டிய விடயம். எனவே வாக்களிக்கும் போது பொருத்தமான பெண்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தி அவர்களது கணிசமான பங்களிப்பை உறுதிசெய்யும் அரசியல் கட்சிகளையும், சுயேச்சைக் குழுக்களையும் இனம் காண்பதும் நல்லது.
கொள்கையில் உறுதியான, மக்கள் நலனில் குறிப்பாகப் பாதிக்கப்பட்ட, பல்வேறு தேவைகளையுடைய மக்கள் பணியில் இதுவரையில் அர்பணிப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பணியாற்றி அவர்களுக்காகப் பல்வேறு மட்டங்களிலும் குரல்கொடுத்து வந்தவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உங்கள் வாக்குகளை வழங்குங்கள்.
நீங்கள் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தாது விட்டால் மக்களுக்குக் குறிப்பாகப் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணியாற்றக் கூடிய மிகவும் பொருத்தமான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் போகலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
தேர்தல் திணைக்களத்தாலும், பவ்ரல் போன்ற தேர்தல் கண்காணிப்பு அலுவலத்தா லும் வெளியிடப்படும் இந்தத்தேர்தலுக்கான அறிவுறுத்தல்களுக்கேற்ப உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
|
தீர்வு காணக்கூடியவர்களுக்கு வாக்குகளை அளியுங்கள்! - யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு
Related Post:
Add Comments