இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இருக்கக்கூடிய பொலிஸ் பிரிவினரும் பாதுகாப்புப்படையினரும் நாட்டினுடைய சட்டம் ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த மனம் வைக்கவேண்டுமௌ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்தெரிவித்துள்ளார்.
இந்த வாள்வெட்டுக் குழுக்களுடனான உறவுகளைக் கைவிட்டு உண்மையாகவே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துபவர்களாக இவர்கள் மாறவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
யாழில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஊடகத்துறை சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் இனவாதம் ஊடகத்துறையிலும் காணப்படுகிறது.
தமிழ் ஊடகவியலாளர்கள் இதுவரை 40 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். எனினும் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
முன்னர் துப்பாக்கிக் கலாசாரத்தின் ஊடாக ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டுவந்தார்கள், தற்போது வாள்வெட்டுக் கலாசாரத்தினூடாக ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
இந்த வாள் வெட்டுக் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கும் தொடர்பு இருப்பதாக பரவலாக செய்திகள் வெளிவருகின்றன.
ஆனால் வாள்வெட்டுக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் மனம் வைப்பார்களாகவிருந்தால் நிச்சயம் அவர்களை உடனடியாகக் கைதுசெய்ய முடியும். ஆனால் இவர்களின் துணையுடனே வாள்வெட்டுக் குழுக்கள் செயற்படுவதென்பது ஒரு துர்ப்பாக்கிய விடயமாகவுள்ளது.
ஊடகவியலாளர் மீதான வாள்வெட்டு என்பது மிகவும் கேவலமான விடயம் என்பதுடன். இந்தத் தாக்குதல் இராணுவத்தினர் மீதோ அல்லது பொலிஸார் மீதோ மேற்கொள்ளப்பட்டிந்தால் வாள்வெட்டுக் காரர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டிருப்பார்கள்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இருக்கக்கூடிய பொலிஸ் பிரிவினரும் பாதுகாப்புப்பிரிவினரும் நாட்டினுடைய சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருந்தால். இந்த வாள்வெட்டுக் குழுக்களுடனான உறவுகளைக் கைவிட்டு உண்மையாகவே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துபவர்களாக மாறவேண்டும்” என்று தெரிவித்தார்.