நேற்று மதியம் 12 மணி முதல் இன்று மதியம் 12 மணி வரை மேற்கொள்ளப்படவிருந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை 10 மணியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தலைவர் சி.தங்கராசா கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு அரசியல் தலையீட்டால் உள்வாங்கப்பட்ட வெளிவாரி உறுப்பினர்கள் தாமாகவே வெளியேறவேண்டும் எனக்கூறி பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம் ஆகியன பலதடவைகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் இன்றுவரை அவர்கள் பதவி விலகியதாக தெரியவில்லை. இன்று பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த பேரவைக் கூட்டத்தில் அவர்கள் கொள்வதை தடுப்பதற்காக நேற்று மதியம் 12 மணி தொடக்கம் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். எனினும் பேரவைக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளமையால் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்தார். 27 அங்கத்தவர்களைக் கொண்ட பேரவையில் 14 வெளிவாரி உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசு மூலம் தெரிவு செய்யப்பட்டு, பேரவை உறுப்பினர்களின் கூட்டம் அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்று அங்கு எடுக்கப்படும் தீர்மானமே பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்துவதால் முறைகேடுகள், பாரபட்சம் என்பன காட்டப்படுவதாகக்கூறியே வெளிவாரி உறுப்பினர்களை வெளியேறுமாறு ஊழியர் சங்கம் போராட்டம் நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. |
வெளிவாரி பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான யாழ். பல்கலைக்கழக ஊழியர்களி்ன் போராட்டம் இடைநிறுத்தம்!
Related Post:
Add Comments