காணி,பொலிஸ் அதிகாரம் மாகாணசபைக்கு வேண்டும் வடக்கு முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்து

இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் போல் இலங்கையிலும் மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி உட்பட சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டு முழுமையான அதிகாரப்பரவலாக்கல் மூலமே இலங்கை தமிழ்மக்களின் பிரச்சினைகளிற்கு நிரந்தர தீர்வினை எட்ட முடியுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் யாழ்ப்பாணத்தில் நடத்திய முக்கிய கலந்துரையாடலின் போதே வடக்கு மாகாண சபை முதலமைச்சர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

வடக்கு முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

‘வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பங்களிப்பு இன்றியும், அவர்களின் கருத்துக்களை உள்வாங்காமலுமே 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இனப்பிரச்சினைக்கு உண்மையான தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அனைத்து அபிலாசைகளையும் நிறைவேற்றக் கூடிய வகையில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது. இவ்வாறான நடவடிக்கையொன்றின் ஊடாக மாத்திரமே இலங்கையில் நிரந்தர தீர்வை காண முடியும்’ என விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்திய அரசியல் யாப்பிற்கமைய இந்தியாவிலுள்ள மாநிலங்கள் தமக்குரிய அபிவிருத்தித் திட்டங்களையும், சட்டம் ஒழுங்கையும், காணி விவகாரத்தையும் கையாள்கின்றன. ஆனால் இலங்கையில் வடக்கு மாகாண சபையான எமக்கு அவ்வாறு செயற்பட முடியாத நிலையே காணப்படுகின்றது என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக மத்திய அரசும், மாகாண சபைக்கும் நிர்வாக நடவடிக்கைகளில் பல சிக்கல்கள் எழுகின்றன. மத்திய அரசு மாகாண சபைக்கு ஆளுநர் ஒருவரை நியமித்து மாகாண சபையின் நிர்வாகத்தில் முழுமையாக தலையீடு செய்யும் நிலையே இலங்கையில் காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவாரத்தை என்பது இந்திய அரசும், இலங்கை மத்திய அரசும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கிடையில் இடம்பெற வேண்டியது அவசியமானது என்றும் முதலமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila