வாகரை மட்டக்களப்புக்கு தென்மேற்கில் 65 கி.மி. அமைந்துள்ள பிரதேசம்.
தமிழ் மக்களின் தனித்துவம் மிக்க இந்தப் பிரதேசத்தில் விவசாயமும் மீன்பிடியும் வாழ்வாதார தொழிலாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திரோபாயம் மிக்க இடமாக விளங்கிய இந்தப் பகுதி 1985 முதல் பாரிய சண்டைக்கான களமாக விளங்கியது.
அதனால் இந்தப் பகுதியை மக்களை கொன்றுகுவித்து இலங்கைப் படைகள் கைப்பற்றின. இன்றும் இந்தப் பகுதியின் கேந்திர முக்கியத்துவமான வளமான பகுதிகளை இராணுவத்தினர் வசப்படுத்தியுள்ளனர்.
அவ்வாறான ஒரு கிராமம்தான் முருகையடிமுனை...
முருகையடிமுனைக் கிராமத்தில் இராணுவத்தினர் மக்களின் குடியிருப்புக் காணிகளை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன் உடனடியாக அக் காணிகளை மீளக் கையளிக்குமாறும் அந்தக் கிராமத்தின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் அதிகமானவர் பெண்கள். நலிந்த தோற்றத்திலும் வலிமையான குரலில் தமது நிலத்தை கோரி குரல் எழுப்பினார்கள்.
இந்த மக்கள் 2006ஆம் ஆண்டில் இலங்கை அரச படைகளின் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்தனர். இந்தப் பகுதியில் இலங்கை அரச படைகள் நடத்திய தாக்குதல்களினால் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டிருந்னர்.
இதனால் இந்தப் பிரதேச மக்கள் உயிரிழிப்புக்களை சந்தித்துள்ளனர். யுத்தத்தால் இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் பலர் கணவரை இழந்தவர்கள் அகம்.
2007ஆம் ஆண்டில் மக்கள் மீளவும் தமது கிராமத்திற்குத் திரும்பியவேளை இராணுவத்தினர் மக்களின் காணிகளை அபகரித்திருந்ததுடன் மக்களை மிரட்டி கையொப்பம் வாங்கி காணிகளை இராணுவ முகாகுக்கு எடுத்துள்ளனர்.
கடந்த 8 வருடங்களாக முருகையடிமுனைக் கிராமம் இராணுவத்தின் வசம் இருப்பதால் கிராமத்திற்கு உரித்தான மக்கள் உரியன்ட்டு பகுதியில் தங்கியுள்ளனர். வளமான கிராமத்தை தம்மிடமிருந்து பறித்துவிட்டு மக்கள் வசிக்க உவப்பற்ற இடத்தில் தம்மை குடியேற்றியிருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர்
இதனால் நேரடியாக சுமார் 50 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யுத்தத்தில் கணவனை இழந்த விதவைகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண் துணையற்ற பெண் தலைத்வக் குடும்பங்கள் இதனால் கடும் பொராளாதார நெருக்கடியை சந்திதுள்ளனர்.
யுத்தத்தில் கணவனை இழந்த பெண்கள் ஆற்றில் மீன்பிடித்தே தமது வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் ஆற்றிற்கு அருகில் உள்ள தமது கிராமத்தை விடுக்குமாறு அவர்கள் கோருகின்றனர். உரியன்கட்டு பகுதியிலிருந்து மீன்பிடிக்க ஆற்றுக்கு வருவது தமக்கு சிரமம் என்றும் அவர்கள் இன்று குறிப்பிட்டனர்.
தமது கிராமம் கடல் வளம், விவசாய வளம் என அனைத்தும் கொண்ட வளமான பூமி என்றும் அதனை விடுவிப்பதன் ஊடாகவே தமது வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும் என்றும் முருகையடிமுனைக் கிராம மக்கள் உக்கிரமான தொனியில் குரல் எழுப்பிக் கூறினர்.
அதிகமும் அறியப்படாத இந்த மக்களின் பிரச்சினை அவர்களின் போராட்டத்தின் மூலம் இன்று வெளியில் வந்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்டு இன்று நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களுக்கு விரைவில் தீர்வு வேண்டும். அவர்கள் தங்கள் பூரவீக நிலத்திற்குத் திரும்பி தொழிலில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மறுவாழ்வு பெற வேண்டும்.
இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமது கோரிக்கை அடங்கிய நீண்ட மகஜர் ஒன்றை வாகரைப் பிரதேச செயலாளர் எஸ். இராகுலநாயகியிடம் முருகையடிமுனைக் கிராம மக்கள் கையளித்துள்ளனர்.
தனது மக்களின் கோரிக்கையை மாவட்ட அரசாங்க அதிபருக்கு உடனே அறிவித்து இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் உறுதியளிப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது கூறினார்.
இந்தத் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் வாகரை மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறினார்.
அத்துடன் மக்களின் காணிகளின் இராணுவம் குடியிருப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று கூறிய அவர் அதைவிட்டு அவர்கள் விலகிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்ததுடன் சம்பூரைப் போன்று இங்கும் இராணுவம் வெளியேற சம்மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.