மக்கள் தொடர்ந்து வீடுகள் கேட்கின்ற போது அதனை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இலங்கை அரசாங்கம் 65 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தருவதாக கூறியுள்ளார்கள். அவ்வாறு ஏற்படின் மக்களின் அந்த பிரச்சினைகளையும் நாங்கள் விரைவிலே தீர்க்க முடியுமென வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையும், மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த குறை நிவர்த்தி நடமாடும் சேவை தட்சனா மருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. இதன் போது வடக்கு மகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
குறித்த நடமாடும் சேவை பல்வேறு விதமான நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. எங்களையும் மக்களையும் ஒன்று சேர்த்து மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அவதானிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஏற்படுகின்ற தாமதங்களையும் குறைத்துள்ளது.
ஒருவர் வந்து தனது பிரச்சினையை எங்களிடம் தொரிவித்தால் அதனை நாங்கள் செயலாளருக்கு அனுப்பி செயலாளர் அது தொடர்பில் உரிய கிராம அலுவலகரினூடாக அதனை அறிந்து இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொணடு அதனை எமக்கு சமர்ப்பிக்க சுமார் இரண்டு மாதங்களாகின்றது.
தாமதத்தினையும், மக்களின் சிரமங்களையும் தவிர்ப்பதற்காக நாங்கள் இப்படிப்பட்ட நடமாடும் சேவையினை மேற்கொள்ளுகின்றோம்.
எங்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தவும் இதனைச் செய்கின்றோம்.
இல்லை என்றால் ஏதோ காரணங்களுக்காக சில விடயங்களை நாங்கள் கிடப்பில் வைத்து விட்டு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காது சில நேரங்களில் இருக்கின்றோம்.
அவ்வாறன நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக அனைத்து அலுவலகர்களையும் ஒன்றினைத்து செயற்படுகின்ற போது இப்படிப்பட்ட விடயங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்க முடிகின்றது.
மக்களுக்கு பதில் கூற வேண்டிய ஒரு கடற்பாட்டை நாங்கள் நிறைவு செய்கின்றோம்.