யுத்தத்தில் வென்றாலும் சமாதானம் தோல்வியே! முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சுட்டிக்காட்டு


யுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமாக அலுவலகத்தின் முதலாது ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
யுத்தக் குற்றம் தொடர்பிலான விசாரணைக்கு உள்நாட்டிலேயே நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் தொழிநுட்ப ரீதியிலான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பகுதிகளின் அபிவிருத்திக்கு தேவையான நிதி வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முகமாக அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து பண்டிகைகளை நடத்துவதற்கு தமது அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
இந்த நிலையில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் யாரும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் அரசியல் கைதிகளின் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதியிடம் சில கேள்விகள் வினவப்பட்டன.
இதன்படி, தமிழ் அரசியல் கைதிகள் மூன்று கட்டங்களாக விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்த நிலையில் குற்றங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றங்கள் இழைத்தவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சிறு குற்றங்களை இழைத்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டார்.
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புப்பட்டு பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் காணப்படுவார்களாயின் அவர்கள் தொடர்பில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேசம் மிகுந்த அவதானத்ததுடன் இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அதனை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இராணுவ ரீதியில் யுத்தத்தினை வெற்றிக்கொண்டுள்ள போதிலும் இயல்பான சமாதானத்தை இன்றும் வெற்றிக் கொள்ள முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்ற ரீதியிலேயே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமாக அலுவலகம் செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்தார்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila