யாழ் ஊடக மையத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘தெற்கில் பொலிஸ் நிலையம் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் திருடப்பட்டமையினை ஒரு சிறிய சம்பவமாக கருத முடியாது. இதுதொடர்பில் சுயாதீனமான முறையிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மேலும், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களது காணி சுவீகரிப்புக்கள், இராணுவ பிரசன்னங்கள் மற்றும் இராணுவ குடியிருப்புக்கள் என்பன நிறுத்தப்படாமல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இவ்வாறு வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை அதிகமாக வைத்திருப்பதற்கான காரணமானது, தமிழ் மக்களை ஓர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கேயாகும்.
இவ்வாறான சிங்கள குடியிருப்புக்களை ஏற்படுத்துவதனூடாக அரசாங்கம் நாடு முழுவதும் சிங்கள, பௌத்தம் பரந்திருப்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பதுடன் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்பேசும் மக்களின் சதவீதத்தை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகும். மேலும் இத்தகைய நடவடிக்கையின் மூலம் வடக்கு கிழக்கில் சிங்கள, பௌத்தம் என்ற அலகை அரசாங்கம் உருவாக்குவதற்கும் முயற்சிக்கின்றது.
பரம்பரை பரம்பரையாக பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்த ஊரில் இரவோடு இரவாக வந்த சிங்கள மக்களுக்கு எவ்வாறு காணிகள் கிடைக்கப்பெற்றன. குறிப்பாக அவ்வாறு குடியமர்ந்தவர்களுக்கு கல் வீடுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இத்தகைய செயற்பாடுகள் எல்லாம் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகள் என்பது தெட்டத்தெளிவாக விளங்குகின்றது’ எனவும் தெரிவித்துள்ளார்