முல்லைத்தீவு மாவட்டத்தின் தென் பக்க முடிவும், திருகோணமலை மாவட்டத்தின் வட திசை தொடக்கமும்தான் கொக்கிளாய். அதாவது இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கினதும், கிழக்கினதும் இதயம் கொக்கிளாய். இப்போது இதயத்தில் பிரச்சினை. தமிழர்களின் இதய நிலத்துக்கு அபாயம்.
1984 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதி அது. கடற்றொழில் நிமித்தம் நீர்கொழும்பு பக்கமிருந்து வந்து, கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறியிருந்த 13 சிங்கள குடும்பங்களுக்கும் , கொக்கிளாயின் பூர்வ குடிகளான தமிழர்களுக்கும் இடையில் முறுகல்நிலை உண்டானது. சிங்களவர்கள் தமிழர்களின் வீடுகளை சூறையாடினர். தமிழர்கள் சிங்களவர்களின் வாடிகளைக் கொளுத்தினர். பொலிஸும், ஊர்காவல் படையும் களத்தில் குதித்தது. தமிழர்களை அடித்துத் துவம்சப்படுத்தியது. இயக்கம் தமிழர்களுக்கு துணையாகவே, இராணுவம் நேரடியாக இறங்கி மக்களை இரவோடிரவாக அடித்து விரட்டியது. பலர் வீட்டோடு சேர்த்து எரித்துக்கொல்லப்பட, எஞ்சியோர் கையில் அகப்பட்ட பொருட்களுடன் நாயாற்றுப் பாலத்தைக் கடந்தனர்.
இவ்வாறு 1983 ஆம் ஆண்டில் கொக்கிளாயை விட்டு வெளியேறியவர்கள், 2011 ஆம் ஆண்டில்தான் மீளக்குடியேறினார்கள். கிட்டத்தட்ட 28 வருடங்கள் கொக்கிளாய் மக்கள் ஊரை பிரிந்திருந்தனர். அவர்களிடையே சொந்த ஊரை மறந்த முழுமையான தலைமுறையொன்றும், அந்தத் தலைமுறைக்கு புதிய வாரிசுகளும் இந்த இடைப்பட்ட காலத்தில் உருவாகியிருந்தனர். ஊர் பெருங்காடாகியிருக்கும் என்றும், தாம் விட்டுப்போன வளங்கள் அப்படியே இருக்கும் என்ற நினைப்புடனும் தான் கொக்கிளாய் மக்கள் மீளக்குடியேறினார்கள்
ஆனால்..
1984 ஆம் ஆண்டில் 13 ஆக இருந்த சிங்கள குடும்பங்களின் எண்ணிக்கை 2011 இல் 300 ஐ தாண்டியிருந்தது. 1984 ஆம் ஆண்டில் மீன்பிடிப்பதற்கான வாடிகளாக மட்டுமே இருந்த சிங்களவர்களின் வாழிடங்கள், 2011 இல் மாடிவீடுகள்போல மாறியிருந்தன. அங்கு வாழும் சிங்களவர்களுக்கு மட்டுமேயான பாடசாலை, தேவாலயம், விளையாட்டு மைதானம் எனப் பொது இடங்கள் என்பனவும் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த விருத்தித் திட்டங்களுக்குள் தமிழர்களின் உறுதிக் காணிகளும் உள்ளடக்கம். இவ்வாறே கொக்கிளாயின் முகத்துவாரம் பகுதி முற்றுமுழுதாக சிங்களமயப்பட்டிருந்தது.
1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் கொக்கிளாய் மத்தியில்தான் அதிகளவு தமிழர்கள் தோட்டம் – துரவுகளுடன் குடியிருந்தார்கள். முகத்துவாரம் பகுதியை கடற்றொழிலுக்கான மையமாகவும், கொக்கிளாய் மத்திய பகுதி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்காகவும் பயன்படுத்திவந்தனர். ஆனால் மீள்குடியேற்றத்துடன் முகத்துவாரம் பறிபோயிருந்தது. சரி, மத்தியாவது மிஞ்சியதே என்ற நம்பிக்கையுடன் கொக்கிளாய் மக்கள் ஊர் மீண்டனர். அவர்களில் ஒருவர்தான், திருஞானசம்பந்தன் மணிவண்ணதாசன். இடப்பெயர்வின் பேரவலங்களையும், பேரலைச்சலையும் தாண்டி, 2011 இல் பெரு நம்பிக்கையுடன் ஊர் திரும்பியிருந்தார்.
“சாமானுகள கொண்டு வந்து எங்கட காணிக்குள்ள இறக்கினவுடன வரிஞ்சி கட்டிக்கொண்டு பிக்கு ஒருத்தர் வந்திட்டார். இந்தக்காணி தங்கட எண்டும், இதுக்குள்ள யாரும் வரக்கூடாது எண்டும் சொல்லிட்டார். எங்கள விரட்டிப்போட்டு, எங்கட காணிய நீங்கதான் அடாத்தா பிடிச்சிருக்கிறியள் எண்டு சொல்லி நாங்கள் வாக்குவாதப்பட்டம். கொஞ்ச நேரத்தில ஆமிக்காரரும் வந்து குவிஞ்சிட்டாங்கள். எங்கள மிரட்டினாங்கள். சாதுவோடா பிரச்சினைக்கு போகக்கூடாது. இனி உந்தக் காணி உங்களுக்கு கிடைக்காது. வேற இடத்தில் காணியப் பாருங்க எண்டு சொல்லி மிரட்டினாங்கள்”
பிறகும் ஒரு நாள் சாதுவுக்கும் எங்களுக்கும் பிரச்சினை வந்தது. அன்றைக்கு இரவு ஆமிக்காரர் என்ர தம்பிய பிடிச்சிக்கொண்டு போயிட்டாங்கள். இரவு முழுதும் பதவியால கொண்டு போய் வச்சி, அடியடியெண்டு அடிச்சிப்போட்டு, இனிமேல் சாதுவிட்ட காணி கேட்கக்கூடாதெண்டு சொல்லி கொண்டு வந்து விட்டாங்கள். அன்றையில இருந்து ஆரம்பிச்ச பிரச்சின. உயிர்போனாலும் எங்கட காணிய நாங்க விடமாட்டம்..” என்கிறார் மணிவண்ணதாசன்.
…உண்மையில் இந்தக் காணி பிரச்சினை மணிவண்ணதாசனுக்கு மட்டும் இல்ல. ஒட்டுமொத்த முல்லைத்தீவு மக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் இந்த விகாரையால பிரச்சின..“ என்று தன் பேச்சை ஆரம்பித்தார், கொக்கிளாய் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் தர்மரடணம்.
உங்களுக்கே தெரியும் இது வடக்கையும் கிழக்கையும் இணைக்கிற பகுதி. இங்க சிங்கள ஆக்களே இல்ல. இந்த இடத்தில ஏன் விகார. இந்தப் பகுதியெல்லாத்தையும் சிங்கள மயப்படுத்தத்தான். இங்க முகத்துவாரத்தில குடியேறியிருக்கிற சிங்கள ஆக்கள்கூட பௌத்தர்கள் இல்ல. அவங்கள் முழுக்க முழுக்க கிறிஸ்தவ ஆக்கள். அவங்களுக்கு தனிய சேர்ச் இருக்க. அதோட இங்க விகார கட்டுறது, வீண் பிரச்சினைகள கொண்டு வரும் எண்டு சொல்லிப்போட்டு, அவங்கள் கூட இதில நாட்டம் காட்டுறதில்ல. எல்லாத்துக்கும் காரணம் இந்த சாதுதான். அவரோட ஆமியும், சீ.ஐ.டியும் சேர்ந்து நிக்கிறாங்கள். சிலநேரங்களில அவர் ஆமியா, சாதுவா எண்டு கூட விளங்காமல் கிடக்கு. சின்னப் பிரச்சினை எண்டாலே சீ.ஐ.டிக்கு அறிவிச்சிப்போடுவார்.
மகிந்தன்ர ஆட்சிக்காலத்தில அவங்களும் இதில விகார கட்ட சரியா கஸ்ரப்பட்டாங்கள். நாங்களும் விடல்ல. தொடர்ச்சியா போராடிக்கொண்டேயிருந்தம். விகார கட்ட விடல்ல. ஒரு மண்டபமும், புத்தரின்ர சிலையும் தான் வச்சிருந்தாங்கள். நல்லாட்சி அரசாங்கம் வந்த பிறகு தான் இதுக்கு பொலிஸ் – ஆமி பாதுகாப்பெல்லாம் குடுத்து அத்திவாரம் போட்டாங்கள். இப்ப சாதுவே நேரடியா கட்டிக்கொண்டிருக்கிறார்.
இதுக்கு பக்கத்தில முதல் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. இப்ப அதை காணவேயில்ல. விகார கட்டுற இடத்துக்கு அடுத்த காணியிலதான், பல நூற்றாண்டு பழமையான கண்ணகியம்மன் கோயில் இருந்தது. அந்தக் கோயில ஆமிக்காரங்கள் தரைமட்டமாக்கி அழிச்சிட்டாங்கள். இப்ப, கண்ணகியம்மன் கோயிலின்ர ஈசான மூலையிலதான் இந்த விகாரைக்கான மலசல கூடத்த கட்டியிருக்கிறாங்கள். எங்கட பண்பாட்ட எப்பிடியெல்லாம் அவமானப்படுத்துறாங்கள் எண்டு பாருங்கோ…எனக் கூறிய தர்மரட்ணம் ஐயாவின் குரலில் தளதளப்பு இருந்தது. என்னபாடுபட்டாவது இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற துடிப்பு அவரின் உரையாடல் முழுவதிலும் இருந்தது.
தடுத்து நிறுத்துவதற்காக அப்படியேதும் முயற்சிகள் இடம்பெற்றதா? தமிழ் தேசிய அரசியல் பேசுவோர், அரசியலவாதிகள், அரச அதிகாரிகள் இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் ஏதாவது எடுத்தார்களா?
பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவரிடம் இந்தக் கேள்விகளுக்குப் பதில் உண்டு.
கொக்கிளாய் விகார பிரச்சின பலருக்கும் தெரியும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்களுக்கும் தெரியும். முதலமைச்சருக்கு கடிதம் மூலமா இந்தப் பிரச்சினைய தெரிவிச்சம். நேரடியாவும் சந்திச்சி கதைச்சிருக்கிறம். அதுக்குப் பிறகு முதலமைச்சர் முல்லைத்தீவில் இருக்கிற பொலிஸ் டி.ஐ.ஜீக்கு, தனியார் காணில் விகார அமைக்கிறது சட்டத்துக்கு முரணானது எண்டும், அதை தடுத்து நிறுத்துமாறும் சொல்லி கடிதம் எழுதினார். அந்தக் கடிதமும் சாதுவுக்கு குடுத்தது.
பிறகு எங்கட பழைய பிரதேச செயலாளரும், தானியார் காணியில விகார கட்டினால் பிரச்சினைகள் வரும், எனவே இதை நிப்பாட்டுங்கோ எண்டு சொல்லி சாதுவுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதமும் சாதுவுக்கு குடுத்தது.
பிறகு காணி ஆணையாளர் முல்லைத்தீவுக்கு வந்து கூட்டம் வைக்கேக்க, கொக்கிளாயில் விகார கட்டுற சாதுவும் வந்திருந்தார். அதில, பிணக்குகள ஏற்படுத்தப் போற கொக்கிளாய் விகாரய கட்டவேண்டாம் எண்டும், உடனடியாவே அதை விட்டு வெளியேற வேண்டும் எனவும் சாதுவுக்கு காணி ஆணையாளர் சொன்னார். சாது கூட்டத்த விட்டு வெளியேறினாரே தவிர, அதுக்குப் பிறகு கொக்கிளாயில் வேகமா விகார கட்டத் தொடங்கினார். இப்ப ஆட்சி மாற்றத்தோட கட்டி முடிக்கிற அளவுக்கு விகார வேலைகள் நடந்துகொண்டிருக்கு..என்றார் அந்த அதிகாரி.
நல்லாட்சி மிக அமைதியான, சதிமிக்க அரசியலை தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லுகின்றது என்கின்றனர் புத்திஜீவிகள். அதற்கு இந்த “மிரட்டும் சாது“வையும் ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
- கொக்கிளாய் பௌத்த விகாரை – திட்ட வரைபடம்
- கொக்கிளாய் பௌத்த விகாரை
- கொக்கிளாய் பௌத்த விகாரை
- கொக்கிளாய் பௌத்த விகாரை
- கொக்கிளாய் பௌத்த விகாரை
- கொக்கிளாய் பௌத்த விகாரை
- கொக்கிளாய் பௌத்த விகாரை
- கொக்கிளாய் பௌத்த விகாரை
- கொக்கிளாய் கண்ணகை அம்மன் அழிவுகள்
- கொக்கிளாய் கண்ணகை அம்மன் அழிவுகள்
- கொக்கிளாய் கண்ணகை அம்மன் அழிவுகள்
பதிவு, படங்கள் மற்றும் காணொளி – ஜெரா