
யுத்தத்தினால் உறவுகளை இழந்துள்ள குடும்பங்களை உரிய முறையில் இனங்கண்டு அவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்ட ஈட்டை ஒரே தடவையில் வழங்க வேண்டும் எனவும், இது அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய செயற்பாடு எனவும் காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் குறித்த விசாரணை அமர்வுகள் மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க எமது ஆணைக்குழுவுக்கு ஜூலை மாதம் 15ஆம் திகதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் எங்களினால் அனைத்து செயற்பாடுகளையும் முடிக்க முடியாது.
விசேடமாக காணாமல் போனவர்கள் தொடர்பில் எமக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் இராணுவத்தினரை விசாரிக்கவேண்டிய தேவை எமக்கு காணப்படுகின்றது. ஆனால் எமக்கு கால அவகாசம் இல்லாமையின் காரணமாக அவ்வாறு செய்ய முடியாமல் உள்ளது.
எனவே நாங்கள் அதனை கைவிடுகின்றோம். நாங்கள் யாரையும் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. ஆனால் விசாரணை செய்யவேண்டிய தேவை காணப்படுகின்றது. எனினும் அதற்கான அவகாசம் இல்லாமல் இருக்கின்றது. இந்நிலையில் நாங்கள் விரைவில் எமது அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கின்றோம். இதேவேளை நான் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து பேசியதிலிருந்து ஒரு விடயத்தை நன்றாக புரிந்துகொண்டேன்.
அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய உடனடி தேவைகள் சில காணப்படுகின்றன. உதாரணமாக பாதிக்கபபட்ட மற்றும் உறவுகளை இழந்துள்ள மக்களை உடனடியாக இனங்கண்டு அவர்களுக்கு அரசாங்கம் ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈட்டை ஒரே தடவையில் வழங்க வேண்டும்.
இது உடனடியாக அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடாகும். அதாவது அந்த பணத்தை அவர்கள் உரிய முறையில் தமது வாழ்வாதாரத்துக்காக பயன்படுத்துகின்றனரா என்பதனையும் பார்க்கவேண்டும்.
அடுத்ததாக காணாமல் போனவர்கள் ஒருவேளை கிடைப்பார்கள். அல்லது கிடைக்காமலும் போகலாம். ஆனால் அவர்களின் உறவுகள் காணாமல் போனவர்களையே நினைத்துக்கொண்டு கவலையில் வாழ்கின்றனர். உனவே அவர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும்.
மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாழ்வாதார உதவிகளை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக ஒரு பொறிமுறையை தயார்செய்யவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.