யாழ் ஊடக அமையத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கொஸ்கம சாலாவ பகுதியில் உள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மிக மோசமான இடப்பெயர்வுகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கியவர்கள் வடபகுதி மக்கள். அந்த வகையில், இடப்பெயர்வுகளின் வலிகளை பற்றி எமக்கு நன்றாக தெரியும். இது இவ்வாறு இருக்கும் போது, வடமாகாணத்தில் பொது மக்களின் மத்தியில் ஏன் இத்தனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இராணுவ முகாம்களில் வெடி பொருட்கள் இருக்குமென்பது தவிர்க்க முடியாதவை. பாரிய வெடி பொருட்கள் களஞ்சியப்படுத்தும் பகுதி இல்லா விட்டாலும், துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் என்பன காணப்படுகின்றன.
இந்த முகாம்களுக்குள் எதாவது வெடி சம்பவங்கள் நடைபெற்றால், எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள். வடமாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு கூறுகின்றபோது, தினேஷ் குணவர்த்தன போன்றோரும் அரசாங்கத்தில் இருக்கின்ற சிலரும் அதனை எதிர்க்கின்றனர்.
இராணுவ முகாம்கள் பொது மக்கள் மத்தியில் தான் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தின் பின்னராவது மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் இருக்க கூடாது என அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நூற்றுக்கணக்கான இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அவை மாற்றப்பட வேண்டும் என்பதனை அரசாங்கம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, தினேஷ் குணவர்த்தன போன்று இனவாதம் பேசக் கூடியவர்கள், பெரும்பான்மையின மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புத் தான் தமிழ் மக்களுக்கும் ஏற்படுமென்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன், வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.